இலங்கை

அரசாங்கம் பெற்ற புலம்பெயர் நிதி எவ்வளவு? அர்ச்சுனா எம்.பி வெளிப்படுத்த வேண்டும்: சீலரத்ன தேரர் வலியுறுத்து!

புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாட்டு மக்களுக்கு வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக புலம்பெயர் அமைப்புகள் எத்தனை மில்லியன் அல்லது பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கின என்பதை அவர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து ஒரு சதமும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. அவ்வாறெனில், இதற்கு முன்னர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி எங்கே சென்றது? அது எந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது, யாருக்கு வழங்கப்பட்டது, எந்த நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட்டது என்பன தொடர்பில் தெளிவான பதில்கள் வழங்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உண்மையில் நேர்மையான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தால், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்துக்கு இடையிலான தொடர்புகள் குறித்த முழுமையான தகவல்களை நாட்டுக்கு வெளியிட வேண்டும்.

நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த முயற்சிக்கும் இடமளிக்க முடியாது என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button