பலதும் பத்தும்

வடிகானுக்குள் சிக்கிய நபர்: 2 மணித்தியால போராட்டத்தின் பின் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள்நபர் ஒருவர் சிக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் அவர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில், பிரதான வீதியை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள வடிகானுக்குள் நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.

இதைக் கண்ட பொதுமக்கள், நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்து, காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படைப் பிரிவினருக்கும் உடனடியாகத் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் காத்தான்குடி பொலிஸாரும் இணைந்து, வடிகானுக்குள் சிக்கியவரை மீட்கும் பணியை முன்னெடுத்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீயணைப்புப் படையினர் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேலாகப் போராடி, இரவு 7.30 மணியளவில் வடிகானுக்குள் சிக்கியிருந்தவரைப் பாதுகாப்பாக மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சிறையிலிருந்து விடுதலையானவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button