வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி இராணுவத்தினரின் “கொமாண்டோ ” பங்களாவின் முன்பாக போராட்டம்

வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ ” பங்களா முன்பாக வெள்ளிக்கிழமை அமைதி வழியில போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கு பலாலியைச் சேர்ந்த மக்கள் 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
![]()