கொழும்பை வந்தடைந்தது அமெரிக்க கடற்படைக் கப்பல் ‘USS CANBERRA’

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘USS CANBERRA (LCS 30)’ என்ற அதிநவீன போர்க்கப்பல், தனது விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கும், பாரம்பரியங்களுக்கும் அமைவாக முறைப்படி வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள இக்கப்பல், அமெரிக்க கடற்படையின் அதிநவீன லிட்டோரல் காம்பாட் (Littoral Combat Ship) அதாவது கரையோரப் பாதுகாப்புப் போர் வகையைச் சேர்ந்த ஒரு கப்பலாகும்.
சுமார் 127.4 மீட்டர் நீளமுடைய இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக (Commanding Officer) கமாண்டர் ஜே. மெக்லாலின் (Commander J. MCLAUGHLIN) கடமையாற்றுகிறார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் ஜே. மெக்லாலின், இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இச்சந்திப்பின் போது இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இக்கப்பலில் வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பந்திகள், கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கையின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது இரு நாட்டுப் படைகளுக்கும் இடையிலான புரிந்துணர்வையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
‘USS CANBERRA’ கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தங்கியுள்ள காலப்பகுதியில் தனது விநியோகம் மற்றும் இதர சேவைகளை முழுமையாக நிறைவு செய்து கொண்டதன் பின்னர், வரும் ஜூன் 14ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளது.

![]()