திருகோணமலை பிரட்ரிக் கோட்டை பிள்ளையார் கோவிலை அகற்றக் கோருகிறார்களா?

திருகோணமலை, பிரட்ரிக் கோட்டை நுழைவாயிலில் உள்ள பிள்ளையார் கோவிலில் சட்டவிரோத கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் எதிர்ப்பு குடிமக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஜமுனி கமந்த துஷாரா இந்த முறைப்பாட்டினை நேரில் முன்னின்று பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜமுனி கமந்த துஷாரா, அண்மையில் கரையோரத்தில் புத்தர் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டு 4 பௌத்த மதகுருக்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறிருக்கையில், இந்தக் கட்டுமானங்கள் குறித்து பொலிஸார் ஏன் பாராமுகமாக இருக்கின்றனர்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஒரு தரப்பினருக்கு எதிராகக் கடுமையாகச் செயற்படும் சட்டம், மறுபுறம் இவ்வாறான சட்டவிரோத கட்டுமானங்கள் நடைபெறும் போது அமைதி காப்பது ஏன்?
இந்த விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை (நேற்று) தொல்லியல் திணைக்களம் மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றிலும் உத்தியோகபூர்வமாக முறையிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![]()