யாழ்., சென்று இன, மத வாதத்தை ஜனாதிபதி தூண்டக் கூடாது; மரிக்கார் எம்.பி. கண்டனம்

இல்லாத இனவாதத்தை உருவாக்கும் வகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் கருத்துக்களை கூறியுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு, தெற்கு, மலையகம், கிழக்கு என எங்கு சென்றாலும் ஒரே கொள்கையில் செயற்படும் தலைவர் ஒருவரே நாட்டுக்கு தேவையாக இருக்கின்றார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி வடக்கிற்கு சென்றால் அந்த மக்களை மகிழவிக்கவும், கிழக்கு சென்றால் அந்த மக்களை மகிழ்விக்கவும் தெற்கிற்கு சென்றால் அந்த மக்களை மகிழ்விக்கவும், மலையகம் சென்றால் அந்த மக்களை மகிழ்விக்கவுமே கதைகளை கூறுகின்றார்.
ஒருகாலத்தில் நாகதீபத்திற்கு செல்வதற்காக எமது முன்னோர் உண்டியல் பணம் சேகரித்துள்ளனர். அவ்வாறான நிலைமையில் நாகதீபம் தொடர்பில் தமிழ் டயஸ்போராக்களை மகிழ்விப்பதற்காக ஜனாதிபதி கருத்துக்களை கூறியுள்ளார்.
இவர்களின் முடியாமை மற்றும் கொள்கை இல்லாமை ஆகியன வெளிப்படுகின்றன. நீங்கள் இப்போது அரசாங்கத்தில் இருப்பதால் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் சட்டப்பூர்வமானது. இதனால் இல்லாத இனவாதத்தை உருவாக்க கூடாது. இப்போது சகல இனங்களும் ஒன்றாக இருக்கும் போது இல்லாத இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் கதைக்கக்கூடாது.
இனங்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையில் கதைகக்கூடாது. வேண்டுமென்றால் இவ்வாறான கதைகளை பெலவத்தையில் வைத்துக்கொள்ளுங்கள். இதனைவிடுத்து மக்கள் கூட்டங்களில் இதனை கூறுவதை நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
![]()