இலங்கை

மீண்டும் இனவாதத்தை தூண்டும் என்.பி.பி. அரசு நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

தேசிய மக்கள் அரசு, நாட்டில் இனங்களுக்கிடையில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டுகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருகோணமலையில் இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் ஒரு துரதிஷ்டவசமான சம்பவமொன்றைக் கண்களினூடாகப் பார்க்க முடிந்தது.

எனக்கு முன்பதாகப் பேசிய அமைச்சர் தயhசிறி ஜயசேகரவுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கின்றேன். நீங்கள் அரசியல் செய்வதற்காகச் சட்டவிரோதமான செயற்பாடுகளை அனுமதிக்கக்கூடாது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் “அரசமைப்பிலே பௌத்த இடத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பௌத்த மதமோ எந்த மதத்தினதும் சட்டவிரோதச் செயல்களுக்கு அனுமதியளிக்கக்கூடாது. அது நானாக இருந்தாலும் சரி,பௌத்த மதத் துறவியாக இருந்தாலும் சரி.

நேற்று திருகோணமலைக் கடற்கரையில் சட்டவிரோதமாகப் புதிய விகாரையொன்று உருவெடுத்தது. நான் அறிந்த வகையில் நண்பர் அருண் ஹேமச்சந்திராவும் இந்த விடயம் தொடர்பில் கரிசனையுடன் இருந்தார்.

நாங்கள், ராஜபக்ஷ அரசுகளில் நடைபெற்ற சட்டவிரோத இனவாதச் செயல்கள் தற்போதைய அரசில் நிகழாது என எதிர்பார்த்தோம். ஆனால், நேற்று திருகோணமலையில் விகாரை அமைக்கப்படுவதற்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டமைக்கு இணங்க பொலிஸார் இந்த விடயம் சட்டவிரோதமானது எனக் கருதி நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அன்றைய தினம் இரவு 8 மணியளவில் புத்தர் சிலை அவ்விடத்தில் பொலிஸாரின் உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தச் சட்டவிரோத செயலைத் தடுத்து நிறுத்த முனைந்த திருகோணமலை என்.பி.பி. பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவும் ஒருவர் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன்.

இதன் பிறகே நான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவைத் தொடர்பு கொண்டு “இது ஓர் இனவாதச் செயற்பாடு. எதிர்காலத்தில் இன, மதங்களுக்குள் மீண்டும் ஒரு முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் விடயம். இதிலே நீங்கள் கவனமெடுக்க வேண்டும்.” – என்று தெரிவித்தேன்.

இரவு 11 மணியளவில் புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. அதன் நிமித்தம் இன்று காலையில் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டை வரவேற்றேன். ஆனால், மீண்டும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் “இந்தப் புத்தர் சிலையைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் அதனை வெளியில் எடுத்துச் சென்றோம்” என்று கூறினார். அமைச்சரின் இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முப்பது வருட கால யுத்தம் நடைபெற்ற போது விடுதலைப்புலிகளால் பௌத்த மதச் சின்னங்கள் சேதப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்கள் இரவோடு இரவாக சென்று சிலைகளை உடைப்பவர்கள் அல்லர். நாம் இனங்களையும் மதங்களையும் மதிப்பவர்கள். எம் தமிழினம் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்குமே தவிர வன்முறைகளில் ஈடுபட்டு சிலைகளை அழிக்கும் செயலில் ஒருபோதும் ஈடுபடாது.

இந்த இராணுவம் கூட மயிலிட்டி பிரதேசத்தில் – பலாலி விமான நிலையத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தைத் தகர்த்துள்ளது.

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவே! நீங்கள் எமது கட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்தக் கட்சி (தேசிய மக்கள் சக்தி) உங்களுக்குப் பொருந்தாது.

நானும் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த போது அந்தக் கட்சியின் இனவாதச் செயற்பாடுகள் இவ்வாறே இருக்கும். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பிரதி அமைச்சராகிய உங்களின் சங்கட மனநிலை எனக்குப் புரியும். மனச்சாட்சியின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி செய்த இந்த விடயம் பிழையானது என ஏற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *