முச்சந்தி

30 வது ஆண்டில் வலி சுமந்து, வழி தேடிய துயரம்; 1995 அக்டோபர் யாழ் இடப்பெயர்வு… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(1995-ம் ஆண்டு அக்டோபர் 30 இல் அவலமிகு யாழ் இடப்பெயர்வின், 30வது ஆண்டின் நினைவு வலிகளை சுமந்து, தமிழர் வழி தேடிய துயரமிகு நாட்களின் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)
உலக வரலாற்றில் எந்த ஒரு இனமும் சந்தித்திராத பாரிய இடப்பெயர்வை யாழ் மக்கள் சந்தித்தார்கள். 1995-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி இந்த மாபெரும் அவலமிகு இடப்பெயர்வு நடந்தது.
யாழ்ப்பாண இடப்பெயர்வு மானுட வரலாற்றில் வலிசுமந்த வரலாறாகவே என்றும் நிலைத்து நிற்கின்றது. யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை ஐந்து இலட்சம் ஆகும். குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த இரண்டு வீதிகளினூடாக ஐந்து இலட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து சென்ற கொடிய நாட்களை யாரும் மறக்க மாட்டார்கள்.
மிகச்சரியாக இன்றைக்கு 30 வருடங்களின் முன் யாழ் இடப்பெயர்வானது 1995 அக்ரோபர் 30இல் நீதி மறுக்கப்பட்ட மக்களாக தமிழ் பேசும் மக்களின் உரிமைக் குரல் அன்று அறுக்கப்பட்டதுஅன்றைய கொடூர நாட்கள் மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது.
எத்தனையோ ஆண்டு காலமாக தங்கள் சொந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு இடம்பெயர்வார்கள் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
துயர வலிசுமந்த வரலாறு :
இந்த துயரத்தை எக்காலத்தினாலும் அழிக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் இன்னமும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றது.
யாழ் இடம்பெயர்வின் போது, இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா என வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்த கோரமான நாட்களாகும்.
சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்ட அந்தக் கொடூரம் மிக்க நாட்களை யாரும் மறக்க மாட்டார்கள். தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், வீதி வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்த கொடுமை மிக்க காலமாகும்.
வலிகள் சுமந்து வழி தேடிய இடப்பெயர்வு :
‘சூரியக் கதிர்’ ராணுவ நடவடிக்கைகள் போல தமிழ் பேசும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடுமையான ஆக்கிரமிப்புக்கள் இன்று நேற்று மட்டும் நடந்தது அல்ல. இந்த சூரியக்கதிர் நடவடிக்கை 1995 அக்டோபர் 17 ல் தொடங்கப்பட்டது. பலாலி, காங்கேசன்துறை போன்ற படைத்தளங்களிலிருந்து முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றும் நோக்கில் படைத்தரப்பினர் போரினைத் தொடங்கியிருந்தார்கள். எங்கும் வான்வழித் தாக்குதல்களும் ஷெல் வீச்சுக்களும் துப்பாக்கிச் சூடுகளும் சரமாரியாக நடத்தப்பட்டன.
பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருப்பதாக கருதி பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு மக்கள்
இடம்பெயர்ந்தனர்.
யாழ்ப்பாணத்தில்்மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் , அன்றைய கும்மிருட்டினில் அத்தனை மக்களும் தங்கள் சொந்த வாழ்வின் வேர்கள் பிடுங்கி எறியப்பட்டு, எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு செம்மணியால் நடந்தார்கள். விமான குண்டு வீச்சினாலும் ஆயிரக்கணக்கில் மக்கள் மடியும் நிலையிலிருந்தும், வெட்ட வெளிகளில் பல
மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தனர். மூட்டை முடிச்சுக்களை கட்டி மக்கள் எல்லோரும் வீதிகளில் இறங்க வீதிகளும் இறுகிப்போனது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பேருந்து நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் நாட்களை கழித்தனர்.
வலிசுமந்த வரலாற்றை யார் மறப்பர் ?
அன்றைய யாழ் மக்களின் இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், சொந்தங்களை தொலைத்து விட்டு வந்தவர்களாக, காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே இரவினில் அவதிக்குள்ளான வலி முடிவடையாமல், இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
உலக வரலாற்றில் யாழ் மக்களின் துயரமிகு இடப்பெயர்வைப் போல
வேறு எந்த உலக நாட்டு மக்களும் சந்தித்திருக்க மாட்டார்கள். ஆர்மேனிய மக்களின் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய துயரமான 1915 இனப்படுகொலை சம்பவங்கள் போல் 1995 யாழ் இடப்பெயர்வு தமிழ் மக்களின் துயர வரலாற்றில்
இடம்பெற்றது.
1995 சூரியக்கதிர் நடவடிக்கை எனும் அந்தக் கொடிய யுத்தத்தால், யாழ்ப்பாணம் தீவிர யுத்த காயங்களுக்கு உள்ளானது. இன்றுவரை ஆறாத காயங்களும் சிதைவுகளும் மக்கள் மனதில் ஏற்பட்டுக் கொண்டேதானிருக்கின்றன.
காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே இரவினில் நிர்ப்பந்தங்களால் துரத்தப்பட்ட அந்த வலி, அதே வலி இன்னமும் தமிழ் மக்கள் மனதிலிருந்து நீக்கப்படவில்லை.
எத்தனை ஆண்டு காலமாக போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் தமிழர்கள் இன்னும் விடுதலைக்காய் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *