கவிதைகள்

ஆனந்த சொரூபமாய் அமைகிறாய் விநாயகா!… கவிதை… ஜெயராமசர்மா

முத்திக்கு வித்தான முக்கண்ணன் மகனே
எத்திக்கு பார்த்தாலும் இருந்திடு கணபதி
சந்திக்குச் சந்தி சன்னதி ஆகியே
கொண்டிடும் கணபதி குழந்தைக் கடவுளே

கைத்தலம் நிறைகனி அப்பமொ டவல்பொரி
எப்பவும் ஏற்றிடும் எம் கணநாதா
முத்தமிழ் நிறைந்திட வைத்திடும் அரன்மகன்
மூவுல கேத்திடும் மூஷிக வாகனா

மோதகம் விரும்பிடும் மூஷிக வாகனா
காதலால் அடியார் கற்கண்டு படைப்பார்
இனிப்பே உனக்குப் பிடிக்கும் என்று
எண்ணிடும் அடியவர் இனிப்பாய் படைப்பார்

ஆனை முகத்துடன் இருப்பாய் நீயும்
ஆனால் குழந்தையாய் தெரிவாய் அப்பா
பானகம் பல்பழம் தேனெலாம் உனக்குப்
படைத்துமே அடியார் பரவசம் அடைவார்

மஞ்சளில் புல்லில் சாணத்தில் அமர்வாய்
மக்கள் விரும்பும் இடமெலாம் அமர்வாய்
விதிமுறை பாராய் மேலாய் இருப்பாய்
பரவிடும் அடியவர் பக்கமே நிற்பாய்

உன்னைத் தொட்டே அனைத்தும் தொடங்கும்
தொடங்கும் அனைத்தும் துலங்கிட வைப்பாய்
வெவ்வினை வேரற வைத்திடும் வல்லமை
கொண்டவன் நீயே விக்ன விநாயகா

மனிதனும் மிருகமும் இணைந்திடு உருவம்
மருளை அகற்றிட வந்தநல் வடிவம்
மனிதனைப் புனிதனாய் ஆக்கிடும் வகையில்
மிருக இயல்பினைக் களைந்திடும் உருவம்

நெற்றியில் குட்டிக் குனிந்து எழுந்து
உன்னைக் கும்பிட வைத்தவன் நீயே
அத்தனை மாந்தர்க்கு அது மருந்தாகும்
அகத்தில் அமர்த்திட வைத்தவன் நீயே

மருந்தாய் இருக்கிறாய் விருந்தாய் இருக்கிறாய்
மாபெரும் சக்தியாய் விளங்கிறாய் நீயும்
அணுகிட அடியார் அருகினில் அணையும்
ஆனந்த சொரூபமாய் அமைகிறாய் விநாயகா

ஆவணிச் சதுர்த்தி ஆனை முகவனை
அடியவர் ஏத்திப் பிடித்திடு விரதம்
நலமுடன் வாழ வேண்டியே அடியவர்
விநாயகன் திருவடி தொழுதிடு விரதம்

ஆலயம் அனைத்தும் ஆவணிச் சதுர்த்தி
ஆன்மீக ஒளியை பரப்பியே நிற்கும்
ஆனை முகத்தான் அருளைப் பெற்றிட
ஆவணிச் சதிர்த்தி அருந்துணை ஆகும்

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *