முச்சந்தி

யாழ் சர்வதேச விமான நிலையம்; எயார் பஸ் A320 ரக விமானங்கள் தரையிறங்கும்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், எயார் பஸ் (Airbus) A320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் படிப்படியாக மேம்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (20) பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார். தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விமான நிலையத்தின் ஓடுபாதை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இது சுமார் 130 பயணிகளை ஏற்றிச் செல்லும் குறுகிய-உடல் கொண்ட விமானங்களைக் கையாள உதவும்.

திட்டமிடப்பட்டுள்ள விரிவாக்கத்தில், ஓடுபாதை, விமான வழிகள், விமான நிறுத்தங்கள் மற்றும் பயணிகள் முனையங்கள் ஆகியன மேம்படுத்தப்படும். இந்த விரிவாக்கத்திற்கு தற்போதைய நிலம் போதுமானதாகக் கருதப்பட்டாலும், தேவைப்பட்டால் மேலதிக நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அமைச்சர் ரத்நாயக்க கூறினார். இருப்பினும், மத்தள சர்வதேச விமான நிலையம் போல், யாழ்ப்பாண விமான நிலையத்தை பெரிய ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விரிவுபடுத்துவது சாத்தியமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், இரண்டு இன்டிகோ விமானங்கள் இயக்கம் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் ஆதரவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு மேலும் பல விமான நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், விமான போக்குவரத்து கட்டணங்களை மேலும் குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், முனைய விரிவாக்கத்திற்கான ஒப்பந்தக்காரரைத் தேர்ந்தெடுப்பதற்கான டெண்டர் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளதாகவும், இதற்கு மதிப்பிடப்பட்ட செலவு 600 மில்லியன் ரூபாய்கள் முழுமையாக நிதியளிக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், இந்த விமான நிலையத்தின் பணிகள் இரண்டு வருடங்களுக்குள் நிறைவடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *