பலதும் பத்தும்

ஒடிஷாவில், தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

ஒடிஷாவில், 20,000 கிலோகிராம் வரை தங்கத்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சுரங்கங்கள் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

ஒடிஷாவின் பல்வேறு மாவட்டங்களில் கனிமவள திட்டங்களுக்கான பணிகளில், இந்திய புவியியல் ஆய்வு மையம் ஈடுபட்டு வருகின்றது.

அப்போது தியோகர், சுந்தர்கர், நபாரங்பூர், கியோன்ஜார், அங்குல் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக மயூர்பன்ஞ், மல்கன்கிரி, சாம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் சுரங்கங்கள் தோண்டி, தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதை, அம்மாநில சட்டசபையில் சுரங்கத் துறை அமைச்சர் விபூதி பூஷண் ஜெனா உறுதிபடுத்தியுள்ளார்.

தங்கச் சுரங்கங்களில் எவ்வளவு தங்கம் இருக்கும் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், 20,000 கிலோ வரை தங்கம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், 7 முதல் 8 லட்சம் கிலோ வரையிலான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதை ஒப்பிட்டு பார்க்கும்போது, தற்போது கண்டறியப்பட்ட தங்கச் சுரங்கங்கள் மூலம் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வது கடினம். எனினும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான கதவுகளை இந்த தங்கச் சுரங்கங்கள் திறந்து விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 96 சதவீத குரோமைட், 52 சதவீத பாக்ஸைட், 33 சதவீத இரும்பு தாதுக்கள் ஒடிஷாவில் இருந்தே வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தங்கமும் அங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டால், கனிமவள ஏற்றுமதியில் ஒடிஷா முக்கிய மாநிலமாக திகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கோலார் தங்க வயலில், 121 ஆண்டுகளில், 10 லட்சம் கிலோ தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button