நீதித்துறை சுயாதீனம் – அரசை கடுமையாக சாடும் விமல்

நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் கருத்துக்களைத் தாம் வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சர்வதேச தொழிலாளர் தினமான மே தின மேடைகளில், அரசாங்கத் தரப்பினர் நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்துப் பலத்த சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள தீர்ப்புகள் மற்றும் அவற்றுக்கான திகதிகளைக் குறிப்பிட்டு, அந்தத் தீர்ப்புகளைக் கைதட்டி வரவேற்கத் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இவ்வாறான செயல்பாடுகள் இலங்கையின் நீதி வழங்கும் முறைமை முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாக விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மட்டுமன்றி, அமைச்சர்கள் சிலரும் மே தினப் பேரணிகளில் இத்தகைய பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இது நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்துப் பாரிய சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பது நீதிபதிகளின் கௌரவத்தையும், நீதிமன்றத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
![]()