செம்மணி மனிதப் புதைகுழி; சிறு குழந்தையின் எலும்புக் கூட்டுடன் சப்பாத்து , குழந்தைகள் விளையாடும் சிறிய பொம்மையும் அகழ்ந்தெடுப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் புதிதாக ஐந்து வரையான மனித எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. அதனுடைய எண்ணிக்கையை சொல்ல முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதென சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று(நேற்று) ஐந்தரை நாட்கள் முடிவடைந்தது. இன்றைய (நேற்று)நாளில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலை புத்தகப்பையோடு இருந்த மனித எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.
அகழ்ந்தெடுக்கும் பொழுது சிறு குழந்தையின் எலும்புக் கூட்டுடன் சப்பாத்து ,குழந்தை விளையாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய (நேற்று) நாள் முழுவதும் நடந்த அகழ்வுப் பணியில் ஐந்து வரையான மனித எலும்புக் கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இதனால் அதில் உள்ள எலும்புக் கூடுகளின் எண்ணிக்கையை சொல்ல முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
பழைய செம்மணி புதைகுழி வழக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சட்ட வைத்திய அதிகாரி அகழ்வு நடந்த பிரதேசத்திற்கு இன்று(நேற்று)வருகை தந்தார். தற்போது அகழ்வுப் பணியில் ஈடுபடும் சட்ட வைத்திய அதிகாரியோடு பேசி கடந்த(1998 கால)அகழ்வுப் பணி தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார்.
பழைய செம்மணி வழக்கும் புதிய செம்மணி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்குகளையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது.
ஏற்கனவே தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா குழுவினரால் அடையாளப்படுத்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான பகுதிகள் நீதிமன்ற அனுமதிக்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய தொல்லியல் துறை மாணவர்களின் உதவியுடன் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் சேர்ந்து தற்போது துப்பரவாக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடம் ஒரு சதுப்பு நிலமான பகுதியாக இருப்பதால் மழைக்குரிய காலநிலை வரும்போது இது நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இன்று(நேற்று)காலை மழை பெய்த போதும் கூட சில நிமிடங்கள் பிந்தினாலும் முழுமையான அகழ்வாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது என்றார்.
![]()