இலங்கை

வடக்கில் தமிழர்களின் காணியை கையகப்படுத்தும் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை

வடக்கில் தனிப்பட்ட உறுதியை நிலைநாட்ட கடினமாக காணப்படும் சுமார் 6,000 ஏக்கர் கடலோர காணிகளை அரசாங்கத்திற்கு கையகப்படுத்தும் நோக்கில், மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இடைநிறுத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இல. 2430 செயல்படுத்தப்பட்டால், நாளை முதல் அந்த காணிகளுக்குரிய சட்ட அதிகாரம் அரசு வசமாகும்.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில், அதன் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 5,941 ஏக்கர் காணியின் உரிமை மூன்று மாதங்களுக்குள் (ஜூன் 28, 2025ற்கு முன்னர்) உறுதிப்படுத்தப்படாவிட்டால், அவை அரசால் கையகப்படுத்தப்படும் என எச்சரித்திருந்தது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (ஜூன் 27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வர்த்தமானி அறிவிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த வழக்கு ஜூலை 2, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

“இந்த காலத்திற்குள் வர்த்தமானி அறிவிப்பு மீளப் பெறப்பட்டால், சட்டமா அதிபர் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் ஆலோசனையில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனக-ஈஸ்வரன், விரான் கொறயா, சட்டத்தரணிகளான பவானி பொன்சேகா, லக்ஷ்மன் ஜெயக்குமார், நிலோஷன் ரவீந்திரன் மற்றும் பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

மே 26 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, ‘காணி தீர்வு குறித்த முதற்கட்ட அறிவிப்பு தொடர்பான ஆலோசனையைப் பெறுதல்’ என்ற தலைப்பில், 2,430 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெற தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.

“பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நேரத்தையும் சூழலையும் உருவாக்குவதற்காக, வெளியிடப்பட்ட 28.03.2025 திகதியிடப்பட்ட இல. 2,430 வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெறுவது அவசியம். அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குமாறு நான் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்.”

கோரிக்கை வைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் அதிக காலம் கழிந்துள்ள நிலையில், 2430 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பை மீளப் பெறுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதிமன்ற தீர்ப்பு இன்று வந்திருக்காவிட்டால், நாளை தினம் (ஜூன் 28) காணிகள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அபாயம் காணப்பட்டதாக, நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் யசந்த கோடேகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *