ஐ.நா.ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கவே செம்மணியில் ‘அணையா தீபம்’ போராட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணியில் எலும்புக் கூடுகள் மீட்கப்படும் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்று திங்கட்கிழமை முதல் அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ‘மக்கள் செயல் அமைப்பு’ தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை முன்னெடுத்த ஏற்பாட்டுக் குழுவினர் இதனை தெரிவித்தனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை.
எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும் என்கிற குறியீட்டு அர்தத்திலேயே இந்தப் போராட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எரியக்கூடிய அணையா விளக்கு ஏற்றப்படுகின்றது.
போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி் முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக அளிக்கையும் இடம்பெறும். 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும்.
போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
![]()