இலங்கை

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படும்! 

ஈரான் – இஸ்ரேல் மோதலானது இலங்கை போன்ற சிறிய நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடியாக பாதகமான தாக்கத்தை செலுத்தும். அவற்றை எதிர்கொள்வதற்கு இப்போதிருந்தே முன்னாயத்தங்களை செய்ய வேண்டும். ஆனால் அராசங்கத்திடம் அவ்வாறு எவ்வித முன்னாயத்தங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது நாட்டின் தேயிலை ஏற்றுமதியில் ஈரான் முன்னிலையிலுள்ளது. அது மாத்திரமின்றி மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகத்தில் ஈரான் பிரதான பங்கினை வகிக்கிறது. மறுபுறம் இஸ்ரேலில் அதிகளவான இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர்.

இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களால் எம்மைப் போன்ற சிறிய நாடுகளின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படும்.

அத்தோடு டொலர் நெருக்கடியும் ஏற்படும். எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

உலக யுத்த நிலைமையும், அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவும் இலங்கைக்கு சிறந்த வாய்ப்பாகும் என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குறிப்பிடுகின்றார்.

அது எவ்வாறு என்று எமக்கு புரியவில்லை. எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் ஏனைய அனைத்து பிரச்சினைகளும் இயல்பாகவே அதிகரிக்கும்.

இது எவ்வாறு இலங்கைக்கு சாதகமாகும்? அரசாங்கத்தின் அறிவற்ற கருத்துக்களால் இறுதியில் நாட்டு மக்களே பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *