இலங்கை

மனிதப் புதைகுழியை வைத்து அரசியல் இலாபம் – சரத் வீரசேகர மிரட்டல்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை வைத்து தமிழ்த் தரப்பினர் அரசியல் இலாபம் தேட முயல்வதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் கண்டுபிடிக்கப்படும் அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்துவது தமிழ்த் தரப்பினரின் வழமை. முதலில் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் உண்மையில் யாருடையவை என்பது பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட வேண்டும்.

ஏனெனில் வடக்கில் போர் மற்றும் அசாதாரண நிலைமைகளின்போது தமிழ் மக்களும் இறந்தார்கள், முஸ்லிம் மக்களும் இறந்தார்கள், சிங்கள மக்களும் இறந்தார்கள், விடுதலைப்புலிகளும் இறந்தார்கள், இராணுவத்தினரும் இறந்தார்கள்.

தற்போது மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் தமிழ் மக்களுடையவை என்றால் அவர்கள் ஏன் உயிரிழந்தார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். வடக்கில் போரில் மாத்திரம் தமிழ் மக்கள் இறக்கவில்லை. விடுதலைப்புலிகளின் சித்திரவதைகளின்போதும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். எனவே, எல்லாவற்றுக்கும் இராணுவத்தினர் மீதும், கடந்த அரசுகள் மீதும் குற்றஞ்சாட்டுவதைத் தமிழ்த் தரப்பினர் தவிர்க்க வேண்டும்.

யாழ். செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை வைத்து தமிழ்த் தரப்பினர் அரசியல் இலாபம் தேட முயல்கின்றனர் என்பதே உண்மை. இந்தத் செயலை அவர்கள் நிறுத்த வேண்டும்.

முதலில் அந்தப் புதைகுழியில் உள்ள மனித எலும்புக்கூடுகள் யாருடையவை என்பதும், அவர்கள் ஏன் உயிரிழந்தார்கள் என்பதும் பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட வேண்டும்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *