தமிழரசுடன் – விக்கி கட்சியினர் கூட்டணி; ஒப்பந்தமும் கைச்சாத்து

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையே நேற்றையதினம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகத்துக்கும் இடையே கொழும்பில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சிகளை அமைக்கும் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளது.
நல்லூர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியன ஆட்சிக் காலத்தை பங்கிட்டு ஆட்சி அமைக்க முடிவெடுத்துள்ளன. முதல் இரண்டு வருட ஆட்சி காலத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணியும் மீதி ஆட்சி காலத்துக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஆட்சி அமைக்கவுள்ளது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஏனைய சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைக்க தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை,
வேலணை பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைக்க தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.
காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எதுவிதமான தீர்மானமும் எட்டப்படவில்லை.
![]()