இலங்கை

பொய்களுக்கு இனி மன்னிப்பில்லை; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! பிரதி அமைச்சர் பகிரங்கம்

எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் பொய்கள் சமூகமயமாக்குவதற்கு இனி இடமளிக்க போவதில்லை. அவர்களின் பொய்களுக்கு இனி மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரை இலக்காகக் கொண்டு எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

323 கொள்கலன்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரணை செய்யப்படுகிறது.

ஆகவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்று வாக்குமூலமளிக்க வேண்டும்.

வெந்நிற ஆடையணிந்தவர்கள் செய்த ஊழல் மோசடிகளால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஒருசில ஊழல்வாதிகள் தற்போது சிறையில் உள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பிற தரப்பினருக்கு விற்பனை செய்த விவகாரம் உலகில் எங்காவது நடந்ததுண்டா? அவ்வாறான சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. அந்த நபர் தற்போதும் பாராளுமன்றத்தில் உள்ளார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உரையாற்றுவதற்கு அனுமதி கோரிய நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய குழுக்களின் பிரதி தலைவர் அனுமதி வழங்கவில்லை.

தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர், நான் இவரது பெயரை குறிப்பிடவில்லை. பொதுவாக குறிப்பிட்டேன். ஆனால் இவர் கலக்கமடைந்து தொப்பியை போட்டுக்கொள்கிறார். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *