உலகம்

போரை விரும்பவில்லை; வளர்ச்சியை விரும்புகிறோம்; பிரேசிலில் சசி தரூர் பேச்சு

”நாங்கள் போரை விரும்பவில்லை. வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என பிரேசிலில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பேசுகையில் தெரிவித்தார்.
‘ஆபரேஷன் சிந்தூர் ‘ நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. சசி தரூர் தலைமையிலான குழு பிரேசிலுக்கு சென்றுள்ளது.

பிரேசிலில் பார்லிமென்ட் உறுப்பினர்களை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் சந்தித்து பேசினார். பின்னர் சசி தரூர் பேசியதாவது:

அமெரிக்க அதிபர் பதவியின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு, அந்த மரியாதையை மனதில் கொண்டுதான் நாங்கள் பேசுவோம். பாகிஸ்தான் உடன் மோதலை நிறுத்தும் படி, யாரும் எங்களை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஏற்கனவே நிறுத்தச் சொல்லியிருந்தோம்.

நாங்கள் போரை விரும்பவில்லை என்பதால் நாங்கள் வற்புறுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறோம். மே 7ம் தேதி தொடக்கத்தில் இருந்தே மோதலை நீடிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம்.

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கவே தாக்குதல் நடத்தினோம். இல்லை என்றால் தாக்குதல் நடத்தி இருக்க மாட்டோம். அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதுக்குழு செல்லும் அதே நாளில் நாங்களும் வாஷிங்டனில் இருப்போம். பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியிருப்பது தற்செயலானது அல்ல.

ஆனால் அவர்கள் இந்திய பிரதிநிதிகள் சென்ற அளவு பல நாடுகளுக்கு செல்லவில்லை. அவர்கள் சில முக்கிய தலைநகரங்களாக நினைக்கும் இடத்திற்கு மட்டுமே சென்றார்கள். இந்தியாவைப் பற்றி அக்கறை கொண்டவர்கள், பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களின் கவனத்தை நாம் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *