தினமும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள்!; நேற்று தெஹிவளையில் சம்பவம்

நாட்டில் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினமும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தெஹிவளை, நெதிமால பகுதியில் நேற்று முற்பகல் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் அங்கே வர்த்தக நிலையமொன்றின் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத போதும், குறித்த பகுதியில் மக்களிடையே பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு என்ன காரணத்திற்காக நடத்தப்பட்டது என்று தெரியவரவில்லை. இது தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கொட்டாஞ்சேனை மற்றும் புலுமென்டல் பகுதியில் நேற்று முன்தினமும், நேற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பபகுதியில் 31 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் கூறுகையில்,
நாட்டில் இதுவரையில் இடம்பெற்றுள்ள 31 துப்பாக்கிச் சூடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதுடன், அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. அந்த வகையில் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட பிஸ்டல் வகை 27 துப்பாக்கிகள் அடங்கலாக 41 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
![]()