இலங்கை

யாழ் பல்கலை மாணவனுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு:இழப்பீட்டுக்கும் விண்ணப்பம்..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரினால் இறுதியாண்டு சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டிருந்த நிலையில் தற்போது விசாரணைச் செயன்முறைகள் அனைத்தும் நிர்வாகத்தினால் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலம் வரை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றிய குறித்த மாணவனால் தனக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை சட்ட நியமங்களிற்கு அப்பாற்பட்டதெனக் குறிப்பிட்டு கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த 13.02.2025 அன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 15.02.2025 அன்று வகுப்புத்தடை நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விசாரணைச் செயன்முறைகள் அனைத்தினையும் கைவிடுவதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எனினும் மாணவனிக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடையை “தவறானது” என்று அறிவிக்கக் கோரியும், இழப்பீடு உள்ளிட்ட நிவாரணங்களைக் கோரியும் குறித்த வழக்குத் தொடரும் என்று மாணவன் சார்பில் முன்னிலையான யாழ் பல்கலையின் சட்டத்துறை முன்னாள் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது. இந்த வகுப்புத் தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தியே சட்டத்துறை மாணவனினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்துறை மாணவன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு குறித்த சட்டத்துறை மாணவன் செவ்வி வழங்கினார் என்று பேராசிரியர்  துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு, பேராசிரியர் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் 9 மாணவர்களுக்கு எதிராக மூன்று வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாகக் குற்றச்சாட்டுக்கள் முவைக்கப்பட்டிருந்தநிலையில், அவை தொடர்பில் முறையான விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் பரிந்துரைகள் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைக்காக விடப்பட்டபோது, ஒழுக்காற்று சபையின் பரிந்துரைகளை ஏற்காது கலைப்பீடாதிபதியின் வலியுறுத்தலின் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு தண்டனையாக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1. ஒரு சம்பவம் கலைப்பீட முதலாம் ஆண்டு பாடத்தெரிவில் வெளிப்படையான ஒரு முறைமை கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தொடர்பில் வட்ஸ்அப் செயலியில் கருத்துத் தெரிவித்த மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விடயத்தில் முறைப்படி அமைக்கப்பட்டிருந்த ஒழுக்காற்று விசாரணைக் குழு, இரு மாணவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்குவது என்று மட்டுமே தீர்மானித்திருந்தது.

ஆனால் கலைப்பீடாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக வாட்ஸ்அப் இல் உரையாடினார்கள் என்பதற்காக கலைப்பீடாதிபதி வலியுறுத்தலுக்கு அமைய ஒரு வருடத்துக்கு மாணவ நிலையிலிருந்து அவர்களை இடைநிறுத்தும் தண்டனை வழங்கப்பட்டது. இங்கு முதலாம் ஆண்டு மாணவனுக்கு நேரடியாக விரிவுரைகள் தொடங்க முன்னரே கலைப்பீடாதிபதியால் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.

2. இரண்டாவது சம்பவம் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவராலும், துணைத் தலைவரினாலும் மாணவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவைக்கும் இடத்தில் போடப்பட்ட பூட்டை உடைத்தது தொடர்பானது. பலமுறை கூறியும் அந்தப் பூட்டுத் திறக்கப்படாததால் பூட்டை உடைத்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டு அவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருந்து. எனினும் விசாரணை அறிக்கை அவர்கள் தான் உடைத்தார்கள் என்பதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் குறித்த சம்பவத்தில் பல்கலைக்கழகப் பாதுகாப்புத் திணைக்களப் பதிவிலற்ற பல்கலைக்கழகச் சொத்து அல்லாத பூட்டு ஒன்றினைக் கொண்டு 30 இற்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளே வைத்துப் பூட்டிய விரிவுரையாளர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதோடு, மாணவர்களிற்காக கேள்வி கேட்கப் போன விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மீது ஒருதலைப் பட்சமாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

3. மற்றையது பரமேஸ்வரன் ஆலயத்துக்கு அண்மையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பானது. இந்த விடயத்தில் முறைப்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, ஒரு மாணவனை மட்டுமே தவறிழைத்ததாகக் குறிப்பிட்டு ஒரு வருடம் மாணவ நிலையில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று முன்மொழிந்திருந்தது. ஆனால் போராசிரியர் அழுத்தத்தின் அடிப்படையில் ஒழுக்காற்று சபை 5 மாணவர்களுக்கும் எதிராகவும் ஒரு வருட இடைநிறுத்தல் தண்டனையை வழங்கியது.

இந்த மூன்று விடயங்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய குறித்த சட்டத்துறை மாணவனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது.

அவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் பேராசிரியர் தொடர்பாக எவ்விதமான அவதூறான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் தொடர்பாக ஒரு சட்ட மாணவனாக, சட்ட வரையறைகளுக்கு உட்பட்டே கடந்த சனவரி மாதம் 24ஆம் திகதி ஊடகங்களுக்கு செவ்வி வழங்கப்பட்டிருந்தது.

பேராசிரியரால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான முடிவுகளை ஏற்கவில்லை என்ற பல்கலைக்கழகப் பேரவையின் முடிவினை, பேராசிரியர் வழங்கிய அழுத்தத்தின் பேரிலும், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தத்தின்பேரிலும் துணைவேந்தர் ஒருதலைப்பட்சமாக மாற்றியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பாக உண்மைகளைத் தரவுகளுடன் பேசிய குறித்த சட்டத்துறை மாணவன் இறுதியாண்டுப் பரீட்சைகளிற்குத் தோற்றுகின்ற நிலையில், இறுதியாண்டு விரிவுரைகளில் அவர் பங்குற்றாத வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபம் 946இன் பிரகாரம் காலவரையின்றி ஒருவரை வகுப்புத் தடைக்கு உட்படுத்த முடியாது. வகுப்புத் தடைக்கு உட்படுத்த முன்னர் அந்த மாணவனின் கருத்தைக் கேட்க வேண்டும் போன்ற விடயங்கள் பின்பற்றப்படாது அவசர அவசரமாகக் கலைப்பீடாதிபதியைத் திருப்திப்படுத்துவதற்காக துணைவேந்தரால் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத் துணைவேந்தரின் செயற்பாடு ஏதேச்சதிகாரமானதும், பக்கச்சார்பானதுமாகும். கலைப்பீடாதிபதியைத் திருப்பதிப்படுத்துவதற்காகவும், அவர் தனது பதவி விலகலை மீளப்பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவு முறைமையில் காணப்பட்ட பிறழ்வுகள் மற்றும் மாணவர் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளில் தன்முனைப்பில் (ஈகோ) சுயவிருப்பு வெறுப்புக்களிற்கு கலைப்பீடாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்களை மாணவர் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றிய குறித்த சட்டத்துறை மாணவனினால் சவாலிற்குட்படுத்தப்பட்டது.

தன்னால் மேற்கொள்ளப்பட்ட விதிமீறல்களை மறைக்கும் நோக்கில் போதைப் பொருள் பல்கலைக்கழகத்தில் இருப்பதாக நாடகமாடி பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயரினை ஏற்படுத்தியுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தினுள் கடந்த ஒராண்டிற்கும் மேலாக போதைப் பொருள் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பாதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் உறுப்புரை 12 உப பிரிவு ஐ, 14 உபபிரிவு (அ) ஆகியவற்றில் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்று நிருபங்களையும், பல்கலைக்கழக பேரவையால் உருவாக்கப்பட்ட துணைவிதிகளை மீறும் செயற்பாடாக இது அமைந்துள்ளது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாக யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் , கலைப்பீடாதிபதி பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் போன்றவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *