இலங்கை

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

கொழும்பு துறைமுக பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த புதைக் குழியிலிருந்து இதுவரை 3 மனித எச்சங்களும் 4 மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் மாதத்தில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டபோதிலும் போதுமான நிதிவசதிகள் இல்லாத காரணத்தினால் இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், தடயவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியின் விசாரணையை நீண்ட காலத்திற்கு இடைநிறுத்த முடியாது எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே நேற்று முதல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த பணிகளை 20 நாட்களுக்குள் முடிக்க எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சோமதேவ நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்குச் செல்ல புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்திற்காக பூமியைத் தோண்டியபோதே இந்த மனித புதைக்குழி கண்டறியப்பட்டது.

நீதிமன்றத்திற்கு விடயம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.