ஜனாதிபதி தேர்தலும், அமெரிக்காவின் எச்சரிக்கையும்; இலங்கை பங்களாதேஷாக மாறுமா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கையில் கலவரம் ஏற்படலாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை புறக்கணிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கடுமையாக வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களுத்துறை பண்டாரகம பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீரவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போதும், தேர்தலின் பின்னரும் வன்முறை அல்லது கலவரம் ஏற்படலாம் என அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும், இந்த எச்சரிக்கையை புறக்கணிக்கக் கூடாது.

‘உங்கள் கொள்கை மற்றும் கருத்தைப் பொருட்படுத்தாமல், இந்த நாட்டை மற்றொரு பங்களாதேஷாக மாற்ற அனுமதிக்காதீர்கள் என இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

பங்களாதேஷில் வன்முறை ஏற்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதுபோல் இன்று எல்லாம் நடந்தேறிவிட்டது.

ஒரு பக்கம் தீவிரவாதிகள் மக்களை கொல்கிறார்கள், மறுபுறம், முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

எனவே, அமெரிக்க அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை நாம் யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

எனவே ‘உங்கள் கொள்கை அல்லது கருத்து என்னவாக இருந்தாலும், 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அதில் கருப்பு நிறத்தை சேர்க்க வேண்டாம்.

இந்த நாட்டின் தேர்தல் வரலாற்றில், அமைதியான முறையில், கலவரங்கள் இல்லாமல், அமைதியைக் காக்க உங்களை அர்ப்பணிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button