முச்சந்தி

‘செம்மணியில் எங்கள் கண்மணிகள்’ – வடக்கெங்கும் தொடரும் நீதிக்கான கலைப் பயணம்

செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள் ” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கலைப்புலவர் ஜெயம் ஜெகனின் எழுத்துரு, பாடல் வரிகள் மற்றும் நெறியாள்கையில் உருவாக்கப்பட்டுள்ள இந்நாடகம், அரங்கத்திற்குள் மட்டுப்படுத்தப்படாமல் மக்களோடு மக்களாகவும், மாணவர்களிடம் நேரடியாகவும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் மக்களினதும், மாணவர்களினதும் பார்வைக்காக நாடக ஆற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 30 நிமிடங்கள் கொண்ட இந்நாடகம், செம்மணியில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களை மையப்படுத்தி, அன்றைய மக்களின் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கையில் இருந்து படிப்படியாக இடம்பெற்ற இராணுவ ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களை காட்சிப்படுத்துகின்றது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் வீதியில் பயணித்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் வேதனைகள் போன்ற பல்வேறு சம்பவங்கள் நாடகத்தில் உணர்வு பூர்வமாக எடுத்துக்காட்டப்படுகின்றன.

மேலும் செம்மணியை வெறுமனே ஒரு மயானமாகப் பார்க்க முடியாது என்றும், அது புதைகுழிகளையும் அங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையும் தாங்கி நிற்கும் இடம் என்பதையும் வலியுறுத்தும் காட்சிகள் பார்வையாளர்களின் மனதை நெகிழச் செய்கின்றன.

இந்நாடகம் சிங்கள சகோதரர்களிடமும் நீதிக்கான கோரிக்கையை முன்வைப்பதுடன் சர்வதேச சமூகத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும் தலையீட்டின் ஊடாக உண்மையும் நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் நிறைவடைகின்றது.

இதுவரை 40ற்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டுள்ளது. நாடகத்தை பார்வையிட்ட பலரும் காட்சிகளின் உணர்வு பூர்வமான தன்மையால் கண்ணீர் மல்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெயம் நாடக கல்லூரியின் ஒழுங்கமைப்பில் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வரும் இந்நாடகத்தில் மொத்தமாக 15 நடிகர்கள் பங்கேற்கின்றனர்.  எழுச்சிப் பாடலாசிரியர் செல்லக்குட்டி இசையமைத்துள்ளார். தபேலா இசையில் ந.நவதர்சன் பங்களித்துள்ளார்.

11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தெருவெளி நாடகமானது செம்மணியில் நீதியின் ஓலம் நிறுவுபெறும் 17 ஆம் திகதி இறுதி நாளில் செம்மணியில் இடம்பெறவுள்ளதுடன் 20 ஆம் திகதி வரை இந்த நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button