முச்சந்தி

குழந்தைக் கவிஞர் அம்பி இன்று சிட்னியில் இயற்கை எய்தினார்!— ஐங்கரன் விக்கினேஸ்வரா.

ஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மறைவின் பின்னரும், அவருடைய படைப்புக்கள் குழந்தைகளின் நாக்கினில் தவழும். தமிழ் கூறும் நல்லுலகால் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் குழந்தை கவிஞன் என போற்றப்படும் கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகன் அவர்கள் தனது 94 வயதில் இன்று (27/4/24)இயற்கை எய்தினார்.
யாழ் பரியோவான் மாணவன் கவிஞர் அம்பி :
சிறுவர் இலக்கிய படைப்புக்களை தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் மண்ணிலும் படைத்த ஈழத்தைச் சேர்ந்த அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்கள் சிறுவர் இலக்கிய வரலாற்றில் காத்திரமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.
எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்கின்றன. தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்தவர் கவிஞர் அம்பி.
இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் வடக்கே நாவற்குழி சொந்த ஊராகும். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி உள்ளார்.
ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான கவிஞர்
அம்பி அவர்கள் அவுஸ்திரேலியாவில் தன் முதுமையிலும் தமிழுக்கு ஆற்றிய பணியை எவரும் மறவர்.
அம்பி அவர்கள் அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு செய்த பங்களிப்பு மிகப் பெரிது.
கவிஞர் அம்பியும் சிறுவர் இலக்கியமும் :
குழந்தைக் கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிகவிநாயகம் பிள்ளை என்றும் போற்றப்படும் கவிஞர் அம்பி
1950 ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அறியப்பட்டவர்.
கங்காரு தேசத்தின் சிட்னியில் தற்போது வசிக்கும் கவிஞர் அம்பி சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகள் பலவற்றையும் படைத்துள்ளார்.
இலட்சியக் கோடி என்ற சிறுகதையின் மூலம் தமிழ் எழுத்துலகில் அறிமுகமானவர். இச்சிறுகதை தினகரன் இதழில் வெளிவந்தது. அத்துடன் தமிழ் நாட்டில் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பெருமைக்கு உரியவர். சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய அம்பியை ஈழத்தின் தேசிக விநாயகம் பிள்ளையாக சுபமங்களா இதழால் வர்ணிக்கப்பட்டவர்.
குழந்தைக் கவியின் படைப்புகள்:
அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் தாசீசியசின் நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘அண்ணா பதக்கத்திற்காக’ கவிதைப்போட்டி நடைபெற்று எம்ஜிஆர் அவர்கள் தங்கப்பதக்கம் அளித்த பத்து கவிஞர்களில் அம்பி அவர்களும் ஒருவர்.
30 ஆண்டுகள் ஆசிரியப்பணி, பின்னர் பாடவிதான எழுத்தாளர் என்று அவரின் பணி விரிகிறது. இளங் குழந்தைகளின் வயது, மூளை வளர்ச்சி மொழித்திறன் ஆற்றல் ஏற்புடைமை இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு சீரிய பாடல்களை எழுதிய பெருமை கவிஞர் அம்பிக்குரியது.
அம்பி அவர்கள் 10 கவிதை நூற்கள், கிரீன் அவர்களைப்பற்றி மூன்று நூற்களைப் படைத்துள்ளார்.
கிறீனின் அடிச்சுவடு,அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள்), வேதாளம் சொன்ன கதை (மேடை நாடகம்),
கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள்),
அந்தச் சிரிப்பு, யாதும் ஊரே, ஒரு யாத்திரை, அம்பி கவிதைகள்,
மருத்துவத் தமிழ் முன்னோடி,
Ambi’s Lingering Memories (Poetry),
Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green, உலகளாவிய தமிழர்
A String of Pearls, பாலர் பைந்தமிழ் ஆகியன அவரின் படைப்புகளாகும்.
சிறுவர் இலக்கிய தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்த கவிஞர் அம்பி அவர்கள்
1968இல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு தங்கப்பதக்க விருதையும் பெற்றுள்ளார். அதன்பின்
1993இல் இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’ம்,
1994இல் கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருதும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் மண்ணில் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் பணி :
புலம்பெயர் மண்ணில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக 1997இல் அவுஸ்திரேலியாவில்  மெல்பன் ‘நம்மவர்’ விருதையும், 1998இல் கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை தங்கப்பதக்க விருதையும் பெற்றுள்ளார். “அக்கினிக்குஞ்சு வாழ்நாள் சாதனையாளர் விருது” அதன்பின்னர்
2004இல் அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருதையும் பெற்றுள்ளார்.
கவிஞர் அம்பி சிறுவர்களுக்காக எழுதிய இந்த இலக்கியத்தின் கதாநாயகர்களாக, பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து போவார்கள். குழந்தைகள் கற்பனாசக்தி மிக்கவர்கள். எனவே இக்கதைகளில் மிருகங்கள் பேசும், பறவைகள் பாடும். வண்ண வண்ண நிறங்களிலும் அழகான கண்ணைக் கவரும் படங்களுடனும் கவர்ச்சியாக சிறுவர்களைக் கவரும் வகையில் இந்த இலக்கியத்தைப் படைத்துள்ளார். சிறுவர் இலக்கியத்திற்கு அம்பியின் படைப்பாற்றலை கௌரவித்து
ஈழத்தில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள் முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி அலங்கரித்துள்ளன.
எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்கின்றன. அம்பியின் கவிதைகள் நூலிலும் பல இதழ்கள், இணையத்தளங்களிலும் வெளியாகி பிரசித்திபெற்றுள்ளன. புலம்பெயர் மண்ணிலும் பல தளங்களில் சாதனைகள் செய்த கவிஞர் அம்பியின்
படைப்பியல் வரலாறு காலங்காலமாக நிலைத்திருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.