இந்தியா வந்த விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்
தாய்லாந்தில் இருந்து கோல்கட்டா வந்த விமானத்தில், நடுவானில் பயணிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ வைரலான நிலையில், விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்), விரிவான விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று முன்தினம்(டிச.,27) பாங்காங்கில் இருந்து கோல்கட்டா கிளம்பிய தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானத்தில் இரண்டு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விமான ஊழியர்கள் சமாதானபடுத்த எவ்வளவு முயன்றும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அப்போது, பயணி ஒருவர், மற்றொருவரை கன்னத்தில் அறைந்தார்.
இது தொடர்பாக பிசிஏஎஸ் இயக்குநர் ஜெனரல் ஜல்பிஹர் ஹசன் கூறுகையில், பயணிகள் இடையே மோதல் குறித்த வீடியோ எங்களின் கவனத்திற்கு வந்தது. இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இது குறித்து விரிவான விசாரணையை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
![]()