கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ‘ருத்ர வீணை’!..
மறுசுழற்சிக்கு நாம் பயன்படுத்திய பொருட்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொருட்கள் கழிவுக்குச் செல்வதும், சுற்றுச்சூழல் மாசடைவதும் தவிர்க்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக மறுசுழற்சியினால் உருவாக்கப்படும் பொருட்கள் அதிக கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது வாகனக் கழிவுகளால் வீணை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் போபால் மாவட்டத்தில் உள்ள ஓர் கைவினை கலைஞர் குழு கழிவுகளைப் பயன்படுத்தி ‘ருத்ர வீணை’ ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த வீணை 28 அடி நீளமும், 10 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டுள்ளது. இது முழுக்க முழுக்க கம்பி, சங்கிலிகள், கியர்கள் உள்ளிட்ட வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்டது. 15 பேர் கொண்ட குழுவினர் சுமார் ஆறு மாதங்களில் இந்த வீணையை உருவாக்கியுள்ளனர்.
இதுபோன்ற மறுசுழற்சி வீணை இதுவரை தயாரிக்கப்படவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல உலகிலே கழிவுகளாலான மிகப்பெரிய வீணை இதுதான். இந்த ருத்ர வீணை தயாரிக்க சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஐந்து டன் எடையுடன் உலகின் மிகப்பெரிய வீணையாக இந்த ருத்ர வீணை உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைவினை கலைஞர் பான் தேஷ்பாண்டே இதுகுறித்துக் கூறுகையில் ’15 கலைஞர்கள் ஆறு மாதங்களாக வாகன கழிவுகளைச் சேகரித்து மிகப்பெரிய வீணையை தயாரித்துள்ளனர். நாட்டின் வருங்கால சந்ததியினர் இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களது விருப்பம்’ என்றார்.
இந்த தனித்தன்மை வாய்ந்த ருத்ர வீணையில் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு போபால் நகரத்தின் ஓர் முக்கிய இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என இதனை உருவாக்கிய கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். ‘மறுசுழற்சிமூலம் அதிசயப் பொருட்களை உருவாக்க கழிவுகளைப் பயன்படுத்துவதே தங்களின் முக்கியக் குறிக்கோள் என தேஷ்பாண்டே தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
![]()