கவிதைகள்
முறுக்கும்,மிக்சரும் தேநீரும்,வெண்பனியும்!… ( கவிதை ) …. ஏலையா க.முருகதாசன்.

யன்னலுக்கூடாய் நோக்குகையில்
பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து
என் கண்களுக்கு சுகமாகி விருந்தாகியது
வெண்பனி விரிப்பு
வெளியே போனாலோ குளிர் வாட்டி வதைக்கும்
இல்லத்தினுள்ளே வெப்பக்கருவியின்
சுகமான சூட்டில் இதமாக உடல்
ஊரில் மழைபெய்யுங் காலங்களில்
அரைச்சுவரில் இருந்து காலாட்டி
மழைத்துளிகள் பட்டும் படாமல்
தொட்டும் தொடாமல் உறவாட
பகோடாவும் தேநீரும் சுவை சேர்த்திடுமே
அது ஒரு காலம் இனிய காலம்
வெண்பனி கண்டு நீண்டு விரிந்து
ஊர்நினைவை தொட்டுச் சுவைத்தது
இன்றிந்த பருவநிலைக் காலம்
மனைவி சுட்டு வைத்த முறுக்கும் மிக்சரும் 
உண்டென்று மனம் மகிழ்ந்து தேநீரைத் தேடியது
மொறு மொறுத்த முறுக்கையும் மிக்சரையும்
வெண்பனிப் பாயை நோக்கியபடியே
தேநீரையும் கலந்து சுவைக்கையிலே
நாக்கைப் படைத்த இயற்கையை நினைக்கின்றேன்
இருப்பவை இருந்தால் எல்லாமே ஆனந்தம்
![]()