கவிதைகள்

“மலரும் மாலையும்” ….. கவிதை ….. ஜெயராமசர்மா.

காலையிலும் மலர்வேன் மாலையிலும் மலர்வேன்
கவலையின்றி இருப்பேன் களிப்பதனைக் கொடுப்பேன்
நாரெடுத்து என்னைக் கட்டிடுவார் மனத்தில்
நானெடுப்பேன் அப்போ மாலையெனும் பெயரை

மலர்மாலை சூட்டி மகிழ்ந்தாள் ஓர்மங்கை
மாலவனும் அதனை வாஞ்சையுடன் ஏற்றான்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாகினாள்
கொண்டாடி மகிழுந்திடும் கோதை நாச்சியார்

பூமாலை புனைந்தேத்தப் புகன்றார் நம்மப்பர்
பாமாலை பூமாலை பரமனுக்குச் சாற்றினார்
ஆழ்வார்கள் அடியார்கள் அனைவருமே கரமேந்தி
பூமாலை கட்டினார் புனிதமுடன் சாற்றினார்

மலரிறைவன் மாவடியைத் தொழுதபடி இருக்கும்
மலர்மாலை மாயிறையின் மார்பினையே தழுவும்
மாயிறையின் மாவடியும் மாண்புநிறை மார்ப்பும்
மலருக்கும் மாலைக்கும் வாய்த்த பெருவரமே

பூக்கொண்டு தொழுதால் வாக்குண்டு நல்மனமுண்டு
மாமலராள் நோக்குண்டு மேனியும் நுடங்காதென்றும்
மூதாட்டி அவ்வையார் மொழிந்திட்டார் பூச்சிறப்பை
பூவெடுத்துச் சாற்றுவோம் பூமாலை சூட்டுவோம்

மண்ணுலகில் வாழ்வாரின் வாழ்வெல்லாம் பூவிருக்கும்
மங்கலத்தில் பூவிருக்கும் அமங்கலத்தில் வந்திருக்கும்
தொட்டிலும் இருக்கும் கட்டிலிலும் இருக்கும்
சுடுகாடு வரைக்கும் தொடர்ந்துவிடும் பூமாலை

வெற்றியிலும் மாலைவரும் விழாவினிலும் மாலைவரும்
சுற்றிநின்று வாழ்த்திடுவார் கரங்களிலும் மலரிருக்கும்
மலராலே பிறக்கின்ற மலர்மாலை மகத்துவத்தை
மாநிலத்தில் வாழ்வார்கள் மனமிருத்த வேண்டுகிறேன் !

Screenshot

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண், அவுஸ்திரேலியா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button