ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கிய குரலோன் மல்லிகை டொமினிக் ஜீவா!… ( கட்டுரை ) ….. ஏலையா க.முருகதாசன்.

பசியால் வாடுபவனுக்குத்தான் ஒரு அவல் சோற்றின் அருமை தெரியும்.தண்ணீர் விடாயினால் தவித்துப் பார் ஒரு துளி தண்ணீரின் அருமை தெரியும்!
ஈழத்தமிழ்ச் சமூகத்திற்குள் இருந்த சமூக எற்ற தாழ்வுகளை சுட்டிக்காட்டி ஏற்றதாழ்வுக்குட்படாத உயர்ந்தோர் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் சமூகத்திலிருந்து வந்த எழுத்தாளர்கள் ஏற்ற தாழ்வுகளையும் எழுதிக் கொண்டிருந்த போது தமக்காக அவர்கள்தானும் எழுதுகிறார்களே என கையேந்தி நின்ற, கையேந்த வைத்த நிலையில் உங்களுக்காக நானிருக்கிறேன் என எழுதுகோலை எடுத்தவர் திரு.டொமினிக் ஜீவா அவர்கள்.
அவரால் இனி எழுத முடியாது.அவர் எம்மோடு இல்லை.மல்லிகைக் கொடி நட்டவன் காலமான போதும் அது செழித்து வளர்ந்து பூத்து மணம் பரப்பி நிற்பது போலவே மல்லிகை திரு.டொமனிக் ஜீவாவின் எழுத்துக்கள் ஈழத்து எழுத்துலகிலும் அதுசார்ந்த வாசகர்கள் மத்தியிலும்,ஈழம் கடந்து தமிழக முற்போக்குவாதிகள் மத்தியிலும் எழுத்து மணம் பரப்பி நிற்கின்றது,நிற்கப் போகின்றது.
திரு.டொமினிக் ஜீவா அவர்களைக் கிட்டத்தட்ட 1960 ஆம் ஆண்டு நான் படித்த கல்லூரியான மகாஜனக் கல்லூரியின் மாணவர் மன்ற நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தேன்.
எழுத்தாளர்களைப் பற்றியும் கதைகள் பற்றியும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.அதற்குப் பிறகு அவருடனான பழக்கம் பின்னாட்களில் எனது அயலவரும் வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் முன்னாள் ஆசிரியராக இருந்த திரு.ஆ.சிநேசச்செல்வன் அவர்களின் வழியாக அது தொடர்ந்தது.
நாங்கள் எமது ஊரான தெல்லிப்பழையில் எமது குறிச்சியுடன் பொருந்திய அம்பனைக் கலைப்பெருமன்றத்தை உருவாக்கி நடத்திய போது அவர் எமது உரையரங்குகளில் பங்குபற்றியதிலிருந்து இன்னும் அவருடனான நெருக்கம் அதிகமாகியது.
அன்றைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் மாதாந்த சஞ்சிகையை வெளியிடுவது என்பது நிதிநிலையைப் பொறுத்தவரை மிக மிகச் சிரமமானது.கல்லில் நார் உரிப்பது போன்றதே.
எனவேதான் அவர் மல்லிகைக்காக ஒரு சிறிய அச்சகத்தையே வைத்திருந்தார்.தானே அச்சுக் கோத்து தனது அச்சகத்தில் தனது மல்லிகையை அச்சடித்து வினியோகித்;தார்.
குறிப்பாக யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இருந்த பூபாலசிங்கம் புத்தகசாலையில் மல்லிகையைப் பார்க்கக்கூடியதாகவிருந்தது.அழகிய வண்ணங்களில் தமிழகத்திலிருந்து வந்த சஞ்சிகைகளுக்கு மத்தியில் மல்லிகையும் தனித்துவமாக தன்னைத்தானே விளித்து நின்றமை என்பது மல்லிகை ஆசிரியரின் தன்னம்பிக்கையையும், சமூக ஏற்ற தாழ்வுகள் மீதான கடுங்கோபத்தையுமே அது காட்டியது.
தமிழகச் சஞ்சிகைகளிடம் எனது வாசிப்பு விடாயை நான் தீர்த்து வந்த போது ஈழத்துக் கதைகள் மீது என்னுடைய ஆவலைத் தூண்டியது திரு.டொமினிக் ஜீவா அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பான „தண்ணீரும் கண்ணீரும்’ என்ற புத்தகமேயாகும்.
„தண்ணீரும் கண்ணீரும்’என்ற இந்தப் புத்தகம் இலங்கைச் சாகித்திய அகடமி விருது பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.அத்துடன் இவருடைய சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதை இலங்கையில் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் அவருக்கு அவராற்றிய ஈழத்து தமிழிலக்கியச் சேவைக்காக கலாநிதிக் கௌரவ விருதளித்துக் கௌரவிக்க முற்பட்ட போது அதனை அவர் எற்க மறுத்தமை என்ற அவரின் வாழ்நாள் பதிவொன்றையும் அவர் விட்டுச் சென்றுள்ளார்.ஏன் அவர் மறுத்தார் என்பதைப் ஈழத்து எழுத்துலகைச் சார்ந்தவர்கள் அறிவார்கள்.
அவர் ராஜா தியேட்டரின் வடககுப்புற மதிலோடிருந்த ஒரு அறையில் அச்சகம் வைத்திருந்த காலத்தில் யாழ்ப்பாணம் போகும் வேளைகளில் அப்பப்ப போய் அவரைச் சந்தித்திருக்கிறேன்.
அவர் மல்லிகைச் சஞ்சிகையை ஒரு பையில் போட்டுக் கொண்டு கடை கடையாக கொண்டு சென்று கொடுத்தமையை தமிழ்ச் சமூகத்தின் ஏற்ற தாழ்வுக்கு எதிரான போராட்டக் கர்ம வீரராக அவரை நான் பார்க்கிறேன்.
ஏலையா க.முருகதாசன்.
![]()