கவிதைகள்

இசைக்கோலம் ஈந்துவிட்டு எங்குசென்றாய் இசையரசா!… ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

https://www.youtube.com/watch?v=PBTQ3Qb7nww

 

பாடும் நிலா பறந்தோடி விட்டது

பண்ணும் பரதமும் கண்ணீரை விடுகிறது
ஏழுசுரங்களும் ஏக்கமுற்று அலைகிறது
ஏன்பிரிந்தாய் பாலுவென எல்லாமே அழுகிறது 
 
 ஆயிரம் நிலவாக அடியெடுத்தாய் பாலுவே
 அனைத்து மொழிகளிலும் இசைத்தாயே பலபாடல்
 கேட்டார்கள் எல்லாம் கிறுகிறுக்க வைத்துவிட்டு
 பாட்டுக்குள் புகுந்தாயே பாலுநீ போனதேனோ  
 
சுந்தரத் தெலுங்கிலே சங்கரா பரணத்தை
சுவையாக கொடுத்தெங்கள் மனமதிலே அமர்ந்திட்டாய்
நந்தமிழாம் தமிழதனை நன்றாக உச்சரித்து
நாடுபோற்றும் இசைதந்த நாயகனே போனதெங்கே 
 
இசைபயிலா நீயோ இசைக்குயிலாய் வலம்வந்தாய்
இசையுலகில் அசையாத இடம்வகித்தாய் பாலுவே 
இசைப்பிரியர் பலருக்கும் இசையருவி நீயானாய்
இசைகொடுத்து மகிழ்வித்தாய் எங்கையா சென்றுவிட்டாய் 
 
மயக்குமிசை நீகொடுத்தாய் மந்திரமும் நீயிசைத்தாய்
உச்சரிப்பு அத்தனைக்கும் உயிர்கொடுத்து நின்றாயே
கவியுள்ளே நீபுகுந்து காட்டிநின்றாய் இசைக்கோலம்
இசைக்கோலம் ஈந்துவிட்டு எங்குசென்றாய் இசையரசா 
 
கொரனா விழிப்புணர்வை கொடுத்தாயே இசையாலே
கொரனா கொடுநோயைக் கொண்டாயே உடலுக்குள் 
இசைகொடுத்த உன்னையே இரக்கமின்று காவுகொண்ட
எமனான கொரனாவை எல்லோரும் திட்டுகிறோம் 
 
எமையெழுச்சி கொள்வதற்கு இசைகொடுத்தாய் பாலுவையா   
இசைகொடுத்த உன்னையே இழந்துவிட்டோம் பாலுவையா
இசையுலகம் உள்ளவரை என்றுமே நீயிருப்பாய்
என்றாலும் உன்னிழப்பால் எமைமறந்து அழுகின்றோம் 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *