ஆகா என்ன பொருத்தம்!…. ( சிறுகதை ) …. கே.எஸ்.சுதாகர்.

பிரசாந்திற்கு 25 வயதாகின்றது. கட்டிளங்காளை. முகத்தில் வலை வேலைப்பாடுகள் கொண்ட கன்னக் கிருதா, மீசை. தினமும் மடிப்புக் கலையாமல் ஆடைகளை அயன் செய்து போடுவான். மெல்பேர்ண் நகரத்தில் ஆர்க்கிட்டெக்காக வேலை பார்க்கின்றான்.
அவனது பெற்றோர்—கிருஷ்ணாவும் சாந்தியும்—இனி அவனுக்கொரு பெண் பார்க்க வேண்டும், இல்லாவிட்டால் வேற்றுநாட்டுப் பெண்கள் அவனைக் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள் என நினைத்தார்கள். தமிழ்ப்பெண்ணாக, அதுவும் இலங்கைப்பெண்ணாக இருந்தால் சிறப்பு என நினைத்தார்கள்.
சாந்தியின் நண்பி மகாலச்சுமிக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் இறுதியாண்டு கணக்கியல் மாணவி. இப்பவே வரன் பார்க்கத் தொடங்கினால் தான், அவள் வேலை செய்ய ஆரம்பிக்கும்போது எல்லாம் சரிவரும் என எண்ணினாள் மகாலச்சுமி. சாந்தியின் மகனை—பிரசாந்தை—தனது மூத்தவளுக்கு வரன் பார்க்க நினைத்திருந்தாள். இன்னொருவர் மூலம் சாந்தியிடம் தூது விட்டிருந்தாள். சாந்திக்கும் கணவனுக்கும் கூட அவர்கள் பெண்ணை பிரசாந் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம்தான்.
பிரசாந் வேலைக்குப் புறப்பட்டு, கண்ணாடிக்கு முன்னே அழகு பார்த்துக் கொண்டிருக்கும்போது,
“மகனே! உனக்கு வயது வந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையா?” அம்மா கேட்டார்.
“ஏன் அம்மா அவசரப்படுகின்றீர்கள்?” உதட்டிற்குள் சிரித்தான் பிரசாந்.
அம்மா அவனையே பார்த்தபடி நின்றார்.
“ஏன் ஆரேனும் பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறியளோ?”
”உனக்கு என்ரை பிறண்ட் மகாலச்சுமியின் மகள் அபிநயாவைத் தெரியுமோ? யூனிவசிட்டி ஃபைனல். அவளை உனக்குப் பேசலாம் எண்டு நானும் அப்பாவும் யோசிக்கின்றோம்.”
“திருமணம் செய்யும் பெண்ணை எனக்குப் பிடித்திருக்க வேண்டும். என்னுடன் நீண்ட நாட்கள் அவள் வாழ வேண்டும்.”
”நீ சின்னனிலை அவளோடை விளையாடியிருக்கின்றாய். உனக்கு அவளைத் தெரியும். பிடிக்கும்.”
“சின்னனிலதானே அம்மா. இப்ப எப்பிடி இருக்கின்றாளோ? நான் கலியாணம் செய்யிற பெண்ணோடை கொஞ்சநாள் பழகிப் பாக்கவேணும்.”
“உனக்கு வரிச்சுமட்டை அடிதான் அவை தருவினம்.”
“நானே எனக்குரிய பெண்ணைத் தெரிவு செய்கின்றேன் அம்மா…. என்னால் முடியாவிட்டால் உங்களிடம் சொல்கின்றேன்” மறுத்துவிட்டான் பிரசாந்.
பிரசாந் வேலை செய்யும் இடத்திற்கு அண்மையாகத்தான் அபிநயா படிக்கும் பல்கலைக்கழகம் இருந்தது. ஒரு நடை எட்டி அவளைப் பார்த்து வந்தால் என்ன என்ற ஜோசனை அவனுக்குத் தோன்றியது. மதியம் போல் கிழம்பிச் சென்று இறுதியாண்டு கணக்கியல் நடக்கும் அறையைக் கண்டுபிடித்தான்.
சும்மா சொல்லக்கூடாது. அபிநயா மூக்கும் முழியுமாக செக்கச் செவேல் என்று இருந்தாள்.
:என்னைத் தெரியுமா?” பிரசாந் அபிநயாவிடம் கேட்டான்.
“தெரியுமே!” பிரசாந்தை நிமிர்ந்து பார்த்தபடி வெட்கத்துடன் சொன்னாள் அபிநயா.
“என்னைப் பிடித்திருக்கின்றதா?” பிரசாந் நேரடியாகக் களத்தில் இறங்கினான்.
“என்ன எல்லாரும் ஒரேயடியாகக் கிழம்பிவிட்டீர்கள் போல் தெரிகின்றது.”
“ஏன் அப்படிக் கேட்கின்றீர்?”
“போனகிழமை தான் அம்மாவும் கேட்டா. உங்களைத் திருமணம் செய்ய விருப்பமா எண்டு..”
அப்புறம் இரண்டு பேரும் சிரித்தார்கள். பழகத் தொடங்கினார்கள். ஒருவருக்கும் தெரியாமல் காதும் காதும் வைச்ச மாதிரிக் காரில் சுற்றினார்கள். காதல் செய்தார்கள். அபிநயா அப்போதுதான் கார் ஒடப் பழகியிருந்தாள். பிரசாந் கார் ஓடுவதன் நுணுக்கங்களை அவளுக்கு மேலும் சொல்லிக் குடுத்தான். இருவரும் நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டார்கள். தங்களையும் புரிந்து கொண்டார்கள். பிரசாந்திற்கு நினைத்ததை விட அபிநயாவை ரொம்பவும் பிடித்துப் போனது. அவளும் கணக்கியலையும் படித்து பிரசாந்தையும் படித்துக் கொண்டாள்.
கல்யாண வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு மோப்பசக்தி அதிகம். இவர்களின் திருவிளையாடல்களை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்கள்.
அபிநயா படிப்பை முடித்துக் கொண்ட மறுவாரம் – அம்மாவைச் சுற்றி குழையக் குழைய வந்தான் பிரசாந்.
“அம்மா…. முந்தி ஒருநாள் அபிநயா எண்ட பிள்ளையைப் பற்றிக் கேட்டனீங்களல்லவோ? அவளுக்குக் கலியாணம் முடிஞ்சுதோ?”
”அவள் உனக்குச் சரிவராதடா மகனே! உங்கள் இரண்டுபேரினதும் சாதகங்களைப் பொருத்தம் பார்த்தோம். பொருத்தமே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.”
திகைத்துப் போனான் பிரசாந். அன்று முழுவதும் தலையைப் போட்டு உடைத்துக் கொண்டான்.
மறுநாள் காலை, இரண்டு வீட்டிலுமே, இருவரையும் காணவில்லை என்ற செய்தி தீயாகப் பரவியது.
![]()