தோள் சாய்ந்தாள்!… (கவிதை )….

பேருந்து நிலையத்தில் ஓர் உருவம்
சாயல் சொல்லிற்று பெண்ணுருவம்
கையிலொரு சம்பந்தமற்ற துணிப்பை
தோளிலே சாய்ந்து தூங்கியகுழந்தை
ஏதோ ஒன்று உந்திற்று அருகில் செல்ல
எனையும் மீறி என் கால்கள் இழுத்து செல்ல
அவளருகே நான் சென்று நின்ற என்னை
ஏறெடுத்து நோக்கியவள் கலங்கிடவே
யாரிந்தப் பெண் எனப்புத்தி தேடியது
எதுவும் புரியாமல் உள்மனம் வாடியது
மயங்கிய நினைவலைகள் மலரமறுக்கிறது
மதிமட்டும் மல்லாடி நினைவை இழுக்கிறது
என்னை அடையாளம் கண்ட பாவையவள்
கண்ணீரொடு என்பெயர் சொல்லியழைக்க
காதோரம் மட்டும் அன்றுகேட்ட இனியகுரல்
என் கண்களை நம்ப வைக்க முடியவில்லை
கல்லூரி நாட்களில் கைகோர்த்து வந்தாள்
காலம்முழுதும் என்னோடிருக்க இசைந்தாள்
காலம் எங்களைச் சேர்த்து வைக்கவில்லை
கயமையான சாதியால் கண்காணாமல் சென்றாள்
மூன்றாண்டில் முழுதாய் கோலம்மாறி
மொத்தமாய் அழகை தொலைத்துவிட்டு
முழுமதி மண்ணில் மாசுற்று தெரிகிறதே
என் அடிவயிறு அனலாய் பற்றி எரிகிறதே ![]()
கணவனை இழந்ததாக சொல்கிறாளே
கதியில்லை எனக்கினியென அழுகிறாளே
கனப்பொழுதும் யோசிக்காது முடிவெடுக்க
என்கரம் அவள் கரம்பற்ற தோள்சாய்ந்தாள்
-சங்கர சுப்பிரமணியன்.
![]()