கவிதைகள்
வாழ்வாங்கு வாழ்வோரே!… (கவிதை)… சங்கர சுப்பிரமணியன்.

உழைத்து வாழ்வதிலே ஒருபோதும் குறைவில்லை
ஓய்வெடுக்கும் வயதினிலும்
ஓடோடி ஒருவர் உழைக்கிறாரே
கொளுத்தும் வெயிலினிலே
குளிரூட்டும் அறையில் பலர்
காலில் செருப்பின்றி தலையில் பழக்கூடையுடன்
இவரோ நடக்கின்றார்
இவர்மீது கருணையொன்றும் காட்ட வேண்டாம்
பழங்கள் கூட வாங்க வேண்டாம்
வாசலில் வந்து நிற்பவனை
தலைப்பாரமதை இறக்கவைத்து
அடிமனதில் ஈரமின்றி
அநியாயமாய் பேரம்பேசும்
அன்புநிறை மாந்தர்களே!
உணவகம் திரையரங்கமென
சென்று செலவிடும் அன்பர்களே
அங்கு மட்டும் ஏன் பேரம் பேசவில்லை
அடிமாட்டு விலைக்கு அநியாயமாய் கேட்கவில்லை
ஒன்றல்ல நாங்கள் ஒன்பதுபேர்
வந்துள்ளோமென
சொல்லிப் பேரம் பேசாமல்
சொன்ன விலை கொடுப்பதுமேன்?
வயிறு ஒட்டி கால்கடுக்க வசலில் நிற்பவனின்
வயிற்றில் மட்டும் அடிப்பதுமேன்?
வகை தெரிந்தால் சொல்வீரோ?
வாழ்வாங்கு வாழும் வளமானோரே!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()