தனி மனித எழுத்து நடையை எழுதப் பழகும் சாட் ஜிபிடி!; உதவியா? ஆபத்தா?

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவையில் முன்னணி வகிக்கும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி இனி தனிமனித எழுத்து நடையை எழுதுவதற்குக் கற்றுக்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொழியறிவு மற்றும் எழுத்தறிவு பெற்ற அனைத்து மனிதர்களும் தங்களுக்கென்று தனி எழுத்து நடையைக் கொண்டிருப்போம். அவ்வாறு நாம் எழுதும்போது சில வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது, வாக்கியங்களின் கட்டமைப்பு, முடிவு என நமக்கென்று தனி ஸ்டைலை பின்பற்றுவது வழக்கம்.
இந்த நிலையில், சாட் ஜிபிடி வொர்க் சேவைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியின் மூலம் தனியொருவரின் எழுத்து நடை மற்றும் வாக்கியங்களில் இடம்பெறும் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு அதேபோல் செய்யறிவால் எழுத முடியும் எனக் கூறப்படுகிறது.
இதன்படி, ஒருவர் எழுதும் மின்னஞ்சல்கள், கடிதங்கள், கதைகள், செய்திகள் என அனைத்து வகையான எழுத்துப்பணிகளையும் அவரது இயல்பான பாணியில் சாட் ஜிபிடியால் எழுத முடியும்.
இந்த வசதிகளைப் பெறுவதற்கு நாம் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் ஜிமெயில், கூகுல் டிரைவ் உள்ளிட்ட சேவைகளை சாட் ஜிபிடி வொர்க்குடன் இணைக்க வேண்டும்.
அவ்வாறு இணைத்தவுடன் நமது ஆவணங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றின் உள்ளடக்கத்தில் உள்ள எழுத்து நடையை ஆராய்ந்து அதேபோல் நாம் கேட்கும் எழுத்து ரீதியான எந்தவொரு சேவைகளையும் நமது இயல்பான எழுத்து நடையில் சாட் ஜிபிடியால் வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அலுவலகப் பணிகளின் சுமையானது கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், மனிதர்களின் வாழ்வியலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகக் கருதப்படும் செய்யறிவு தற்போது எழுத்து நடை போன்ற தனிமனித அடையாளங்களையும் ஆக்கிரமிப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக இணையவாசிகள் கூறுகின்றனர்.
இதுவரை உங்களின் தேவைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்பட்ட செய்யறிவு; இனி உங்களைப் போலவும் செயற் படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()