இலங்கை

துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உன்னை எங்காவது கண்டால் கொன்றுவிடுவோம். வெளியே மாட்டும் போது உன்னை விடமாட்டோம், கொன்றுவிடுவோம்” என அவர்கள் மிரட்டியுள்ளனர்.

குறித்த அதிகாரி, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்று ஏற்பட்ட அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு கடமைக்குச் சமூகமளித்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவரது பாதுகாப்பிற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை முன்னின்று வழிநடத்தியதாகக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவரை, அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையிலுள்ள ஏனைய கைதிகள் குழுவினர் கொடூரமாகத் தாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் காரணமாக அவருக்குச் சரியாக நடக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை கட்டுவெல்லேகம சுரேஷ் மற்றும் அவரது சகாக்கள் 13 பேர் இணைந்து திட்டமிட்டு நடத்தியுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ‘ரொக்கி’ எனப்படும் கைதியும் அடங்குவதுடன், அவர் சுரேஷுடன் இணைந்து முழு மோதலையும் வழிநடத்திவிட்டு பின்னர் மறைந்திருந்துள்ளார். மோதல் முடிவடைந்த பின்னர், தனக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் நடித்து, சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து ஏனைய கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்களை விநியோகிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதற்கமைய, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 13 பேர் அடங்கிய குழுவினர் தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பொறுப்பிலிருந்த 22 ‘ரிப்பீட்டர்’ ரக துப்பாக்கிகளும், 10 ‘T56’ ரக துப்பாக்கிகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலையிலுள்ள ஏனைய துப்பாக்கிகளும் மேலதிக விசாரணைகளுக்காக அந்தத் திணைக்களத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறைச்சாலைக்குச் சொந்தமான காணாமல் போயிருந்த ‘ரிப்பீட்டர்’ ரக துப்பாக்கியும் சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button