பலதும் பத்தும்

இலவச செயற்கை கருத்தரிப்பில் பிறந்த இரட்டையர்கள்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கருத்தரிப்பு மையங்களுக்கு சவால் அளிக்கும் வகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி 6.97 கோடி ரூபா மதிப்பில் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு வைத்தியசாலையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டது.

இந்த மையத்தில், குழந்தை இல்லாத பல பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 32 வயது பெண் ஒருவருக்கு, செயற்கை கருத்தரிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த அந்த பெண்ணின் கருப்பையில் கருமுட்டை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, வைத்திய குழுவினர் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.

இதன் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அந்தப் பெண்ணுக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ஒரு குழந்தை 1.3 கிலோ எடையிலும், இன்னொரு குழந்தை 1.28 கிலோ எடையிலும் இருந்தது. குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியர்களின் கண்காணிப்பில் உள்ளன.

தமிழகத்தில் முதன்முறையாக அரசு மகப்பேறு வைத்தியசாலையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குழந்தை இல்லாத ஏழை பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button