மோதல் தீவிரமடைய அரசே வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது; நாமல் எம்.பி. குற்றச்சாட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தீவிரமடைவதற்கான சூழலை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்தது. முதல் நாள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை முறையாக கட்டுப்படுத்தியிருந்தால் இரண்டாம் நாள் மோதல் ஏற்பட்டிருக்காது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் முதல் நாள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை முறையாக கட்டுப்படுத்தியிருந்தால் இரண்டாம் நாள் மோதல் ஏற்பட்டிருக்காது. ஆனால் அரசாங்கம் அவ்வாறு ஒன்றும் செய்யவில்லை. அரச நிர்வாக கட்டமைப்பு முழுமையாக அரசியல் மயமாகியுள்ளதால் அரச ஊழியர்களால் தனித்துவமான முறையில் தீர்மானம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தீவிரமடைவதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. அப்போது சிறைச்சாலைக்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் தற்போது அவ்வாறான எதுவும் இடம்பெறவில்லை.
சிறைச்சாலைகளில் 10 ஆயிரம் கைதிகள் இருப்பதற்கான பௌதீக வளமே காணப்படுகிறது.ஆனால் தற்போது போதைப்பொருள் தொடர்பான கைதுகள் தீவிரமடைந்துள்ளன. 40 மற்றும் 45 ஆயிரம் பேரை சிறையில் அடைக்கும் போது சிறைச்சாலையின் நெரிசல் நிலை மேலும் தீவிரமடையும் தற்போதும் அவ்வாறான நிலைமையே சிறைச்சாலைகளில் உள்ளது என்றார்.
![]()