இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சந்தேகநபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, ஏற்கனவே பெயரிடப்பட்ட 38 சந்தேகநபர்களுடன் இன்று பெயரிடப்பட்ட 24 பேரையும் சேர்த்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மொத்த சந்தேகநபர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சந்தேகநபர்களின் பெயர்கள் திறந்த நீதிமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

அது தொடர்பான பெயர் பட்டியலையும் ‘பி’ அறிக்கையையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேரடியாக நீதவானிடம் ஒப்படைத்தது.

அத்துடன், சந்தேகநபர்களான 38 பேரை இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சம்பவத்தில் காயமடைந்த சாட்சியாளர்களான சிறைச்சாலை அதிகாரிகள் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அந்த அடையாள அணிவகுப்பை எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இது தவிர, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களையும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் 62 சந்தேகநபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றம், நெரிப்படைச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button