முச்சந்தி

வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு: நீதிமன்றத்தில் ஒப்படைத்த பொலிசார்;  மேயர் உட்பட நால்வரை கைது செய்ய நடவடிக்கை

வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஓப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்தார்.

வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பிரதான பரிசோதகர் ஆனந்த விஜேயசேகர தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிசார், வவுனியா, ஓயார் சின்னக்குளம் பகுதியில் இருந்து மாநகர சபைக்குரிய செங்கோலை மீட்டெடுத்தனர்.

முன்னாள் மேயர் வழங்குமாறு கூறி அவருடைய நண்பர் ஒருவர் அங்கு கொண்டு சென்று செங்கோலை வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அங்கு கைப்பற்றப்பட்ட செங்கோல் வவுனியா நீதிமன்றில் வியாழக்கிழமை (02.07) பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து செங்கோலை வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைக்குமாறு மன்றினால் பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதையடுத்து செங்கோல் உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் மேயர் மற்றும் பெண் ஒருவர் உட்பட நால்வரை கைது செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யபடுவார்கள் எனவும், அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரினையும் பொலிசார் தேடி வருவதாகவும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button