எம்.பி. பதவியிலிருந்து விலகுகிறாரா அர்ச்சுனா?

தமிழீழம் என்ற பெயரில் தமிழரை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் இனம் விளங்கிக்கொள்ளாவிட்டடால் எமது வடக்கும், கிழக்கும் அழியும் என்பதனை எழுதிவைத்துக் கொள்ளுங்கள். வவுனியா மாநகர மேயரையும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியமை முற்றிலும் சரியானது. அதனை நான் வரவேற்கின்றேன் என யாழ் மாவட்ட எம்.பி. யான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நான் அடுத்துவரும் மாதங்களில் எனது பாராளுமன்ற பதவியை இராஜிநாமா செய்தால், இந்த இடத்தில் ஒரு பெண்மணியே அமரவுள்ளார். தயவு செய்து அந்தப் பெண்மணியை பாதுகாப்பான இடத்தில் அமரக்கூடியவாறு ஆசன நிரல் நிலையை இங்கே ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்விடத்தில் ஒரு பெண்மணி இருக்கும் போது அதற்கு அடுத்ததாக பெண் பித்தர் இருந்தால் அந்த பெண்ணால் இருக்க முடியாது. இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி கதிரைகளை மாற்றியமைக்க வேண்டும். கதிரைகளை மாற்றித் தருமாறு நான் பல தடவைகள் கடிதம் கொடுத்துள்ளோம். இதில் கவனம் செலுத்துமாறு கோருகின்றோம்.
இதேநேரம் வவுனியா மாநகர மேயரையும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியுள்ளார்.ஆளுநரின் இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானது. அதனை நான் மிகவும் வரவேற்கின்றேன்.
இதேவேளை தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டும். தமிழரை கொலை செய்வது யார்? தமிழீழம் என்ற பெயரில் தமிழரை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் இனம் என்றாவது ஒருநாள் விளங்கிக்கொள்ளாவிட்டால் எமது வடக்கும், கிழக்கும் தொடர்ந்தும் அழியும் என்பதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
![]()