செம்மணியில் மீட்கப்படும் எலும்புகூடுகள் தமிழ் இனப் படுகொலைக்கான சாட்சி; சிறீநாத் தெரிவிப்பு

செம்மணியில் மீட்கப்படும் எலும்புகூடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக காலம் காலமாக செய்யப்பட்ட அநீதிகளையும், இனப்படுகொலைகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாகியுள்ளது என்றும், இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியாக முடிவெடுத்து தனது நடுநிலையையும், நீதித் தன்மையும் வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறீநாத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சிறீநாத் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
செம்மணியில் 400க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. உங்களின் அனுசரனையில் இந்த விடயத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு அரசாங்கத்திற்கு நன்றியை கூறினாலும் நீதியை பெற்றுக்கொடுக்கவும், அதனை மேலும் வலுவுள்ளதாக மாற்றுவதற்கும் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்ட மனித உடல்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் உரிய காலத்தில் எடுக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு காலம் காலமாக செய்யப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை உறுதிப்படுத்துவதற்காக இந்த விடயங்களை ஆவணங்களாக கொண்டு செல்லும் பொறுப்பு உள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியாக முடிவெடுத்து தனது நடுநிலைத் தன்மையையும், நீதித்தன்மையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
![]()