உலகம்

இந்தியா நம்பகமான கூட்டாளி; மேற்கத்திய நாடுகளைச் சாடிய புடின்

இந்தியா நம்பகமான கூட்டாளி என்றும், ரஷ்யாவுடனான தனது ஒத்துழைப்பைக் குறைக்குமாறு இந்தியாவைக் கட்டாயப்படுத்தும் மேற்கத்திய முயற்சிகள் பயனற்றவை என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்குத் தீங்கு விளைவிப்பவை என்றும் புடின் வலியுறுத்தியுள்ளார். முன்னணி உலகளாவிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடலில்,

புடின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் அதன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் பாராட்டினார். மேலும், அந்நாட்டுடன் தனது பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதில் ரஷ்யா உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.

இந்தியா உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதோடு, தற்போது ஈர்க்கக்கூடிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் வெளிப்படுத்தி வருகிறது என்று புடின் குறிப்பிட்டார்.

மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற மைல்கல்லை எட்டும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

இந்தியா, மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வெளிப்படுத்தியுள்ள உலகின் முன்னணிப் பொருளாதாரங்களில் ஒன்றாகும். இது திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. இது, இந்திய அரசு மேற்கொண்டு வரும் கடின உழைப்பின் விளைவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தனது சொந்த தேசிய நலன்களுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி வலியுறுத்தினார்; மேலும், அமெரிக்காவுடனான இந்தியாவின் தூதரக ஈடுபாடு, ரஷ்யாவுடனான அதன் காலத்தால் மெய்ப்பிக்கப்பட்ட உறவுக்குத் தடையையோ அல்லது பாதிப்பையோ ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில், ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பதற்கான மேற்கத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்தியாவை ஒரு நம்பகமான கூட்டாளியாகவே ரஷ்யா கருதுவதாகவும், இந்தியா வேறு எந்த நாட்டுடனும் கொண்டுள்ள இருதரப்பு உறவுகளால் எவ்விதமான எதிர்மறை விளைவுகளையும் தான் காணவில்லை என்றும் ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button