இலங்கை

வடபகுதியில் ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’;  ஆரம்பித்து வைப்பு

நாடளாவிய ரீதியில் முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (One-Stop Investment Portal – OSSI) வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (NIS-26) இன் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே இந்த ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆரம்ப மற்றும் வரவேற்புரையை நிகழ்த்திய ஆளுநர், இந்த நுழைவாயிலானது வெறும் டிஜிட்டல் தளம் மாத்திரமன்றி, இது ஒரு மாற்றத்தின் அடையாளமாகும்.இந்தச் சாதனை, இடைவிடாத கூட்டு உழைப்பு மற்றும் சரியான நேரத்தில் எமக்குக் கிடைத்த ஆதரவின் விளைவாகும். த மனேஜ்மென்ட் கிளப் மற்றும் வவுனியா பல்கலைக்கழகக் குழுவினருக்கு எனது ஆழமான நன்றிகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அரசாங்கமும், தனியார் துறையும், கல்வித்துறையும் ஒரு பொதுவான நோக்கத்துடன் இணையும் போது இவ்வாறான மாபெரும் முன்னேற்றங்கள் சாத்தியமாகும்.

இன்று நாம் ஆரம்பித்து வைக்கும் இந்த மாகாண மாதிரியானது, இலங்கை முழுவதுக்குமான ஒரு தேசியக் கட்டமைப்புக்கான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுக்கின்றது.

முதலீட்டாளர்கள் இங்குள்ள திணைக்களங்களின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் காலதாமதங்களால் விரக்தியடைந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் பலமுறை இடம்பெற்றுள்ளன.

அனுமதி நடைமுறைகளில் உள்ள நீண்ட பொறிமுறையே இதற்குக் பிரதான காரணமாக அமைந்திருந்தது. இவற்றையெல்லாம் சீர் செய்யும் வகையிலேயே முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’, அதாவது ஒற்றைச் சாளர முறைமை உருவாக்கப்பட்டு தற்போது பொதுத்தளத்திற்குப் பகிரப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் வடக்கு மாகாணத்தை நோக்கித் தமது முதலீடுகளைக் கொண்டுவர மிக இலகுவாக அணுகமுடியும்.

இந்தச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ இன் செயற்றிட்டத் தலைவர் இந்திக கௌசால் ராஜபக்ஷ தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த மாநாடு மற்றும் அதனோடு இணைந்த தொடர் முயற்சிகளுக்கு ஆதரவளித்த அமைச்சர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்த உச்சிமாநாட்டில் 18 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறானதொரு வெற்றிகரமான மாநாட்டைத் தமது மாகாணத்திலும் நடத்துமாறு வடமத்திய மாகாண சபையிடமிருந்து தங்களுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூரல் ஜெனரல் சாய் முரளி மற்றும் சென்னையிலுள்ள இலங்கைத் துணை உயர்ஸ்தானிகர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

அதன்பின்னர், ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ஆளுநரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ இன் இறுதி அறிக்கையும் ஆளுநர் உள்ளிட்ட அதிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர், உலக வங்கிப் பிரதிநிதிகள், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் சார்பில் கலந்துகொண்ட விசேட பிரதிநிதி மற்றும் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button