ஊரே பதற்றமாக தேட, மலையில் அசந்து தூங்கிய சிறுவன்

துருக்கியில் 10 மணிநேரம் காணாமல் போன சிறுவன் ஒருவன், தனது வீட்டிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்று ஒன்றில் எவ்விதக் கவலையுமின்றித் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
துருக்கியின் உஸ்மானியே (Osmaniye) மாகாணத்தை சேர்ந்த சம்லிடெப் (Çamlıtepe) கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் முகமது சுலைமான் மாரே, விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளார். சிறுவனை காணாததால் அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் பெரும் அதிர்ச்சிக்கும் பதற்றத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், AFAD மீட்பு படையினர் மற்றும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஒன்றிணைந்தனர். இரவு முழுவதும் டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சுமார் 10 மணிநேரம் நீடித்த இந்த தீவிர தேடுதலின் முடிவில், வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் சிறுவன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
மீட்புப் படையினர் அங்கு சென்றபோது, தன்னை ஒரு ஊரே பதற்றத்துடன் தேடிக்கொண்டிருப்பதை அறியாத அச்சிறுவன், எதைப்பற்றியும் கவலைப்படாமல் குன்றின் மேல் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுவன், மருத்துவபரிசோதனைகளுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
சிறுவனின் இந்த நிம்மதியான உறக்கம் குறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
![]()