இந்தியா

மேற்கு வங்கத்தில் வன்முறை: இரு தரப்பினர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் முர்ஷிதாபாத்தில் பதற்றம்

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் அந்த மாவட்டத்தில் அதிக செல்வாக்குள்ள ஹுமாயூன் கபீரின் ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பும் கட்டைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், அங்கிருந்த காரையும் அவர்கள் தாக்கினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்து பாதுகாப்புப் படையினர் விரைந்ததை அடுத்து அங்கு அமைதி ஏற்பட்டது.

முன்னதாக, முர்ஷிதாபாத்தில் நேற்று பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதில் ஒரு பெண் பாதிக்கப்பட்டார். ஹுமாயூன் கபீரின் கட்சியினரே தாக்குதலுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறி இருந்தார். இந்நிலையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட ஹுமாயூன் கபீர் அங்கு வந்தார். அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர் சம்பவ இடத்துக்குச் செல்ல விடாமல் தடுத்தனர். ஹுமாயூன் கபீரை போலீசார் மிகுந்த பாதுகாப்போடு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹுமாயூன் கபீர், “தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும். அது அமைதியாக நடந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்த வாக்குச்சாவடிகளில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருடன் இணைந்து இரவு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பணத்தைக் கொடுத்து அதிகாரிகளுடன் கைகோத்து தேர்தல் நடைமுறைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றி வருகின்றனர்.

வாக்குச்சாவடிகளுக்குள் நிலைமை சீராக இருக்கலாம். ஆனால் வெளியே மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இரவு முழுவதும் மிரட்டப்பட்டார்கள். தேர்தல் ஆணையம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மாநிலக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும், மத்திய படைகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதும் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் செல்வாக்கால் நடக்கின்றன. தேர்தல் நடவடிக்கைகள் சமரசம் செய்யப்படுகின்றன. சாமானிய மக்களால் என்ன செய்ய முடியும்?” எனக் கூறினார்.

முர்ஷிதாபாத்தின் டோம்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நஜர்புரில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

முர்ஷிதாபாத் வன்முறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசன்சோல் தக்ஷின் தொகுதி பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா, “இதை நான் காலையிலேயே சொன்னேன். மம்தா பானர்ஜி அரசு இதுபோன்ற செயல்களைச் செய்யும், குண்டுகளை வீசும், மின்வெட்டை ஏற்படுத்தும். அவர்கள் கேமராக்களை சேதப்படுத்த முயல்வார்கள்.

இதுதான் திரிணமூல் காங்கிரஸின் செயல்முறை. இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம் வாக்காளர்களை வாக்களிக்க வரவிடாமல் தடுத்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுபோன்ற சம்பவங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று 152 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 41.11% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button