கவிதைகள்

பாரதி இல்லையடி குதம்பாய்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண் இனத்தை
வாழவிட மாட்டாயா

இசையில் கலந்து
காற்றில் மிதந்து வந்த
என்றோ கேட்டபாடல்
நினைவில் வருகிறது

சித்திரமே சித்திரமே
சிரிக்கக் கூடாதா
சிறிது நேரம் அருகினிலே
இருக்கக் கூடாதா

என்றொரு கவிஞனும்
பெண்ணை சித்திரமாக்கி
கெஞ்சிய பாடலும்
என் மனதில் படுகின்றது

சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
என்ற கவிஞனின் வரிகளும்
என்னை சித்திக்க வைத்தது

சில வரிகளில் கேட்கிறேன்
சித்திரத்தை சிரிக்க கேட்டவன்
சித்திரம் பேசிடக் கேட்டவன்
ஏன் வாழவிட மாட்டாயா என்றான்

சித்திரத்தை சித்திரமாய் பார்த்தான்
சிந்தையில் கோளாறு இல்லாததால்
பெண்ணை பெண்ணாய் பாராததால்
மாநிலத்தில் கேள்வியாய் நிற்கிறான்

படிப்பதுவோ இராமாயாணம் என்றும்
இடிப்பது பெருமாள் கோவிலென்றும்
இங்கும் சிலர் இருப்பதும் ஏனோ
மனம் இருள்மூடிக் கிடப்பதும் ஏனோ

சொல்லுக்கு அடங்காதே
இவர் சூரத்தனங்கள் எல்லாம்
வல்லமை தாராயோ என்று பாடிடவும்
பாரதி இல்லையடி ஏ…குதம்பாய்!

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *