ஒரு குழந்தை,மூன்று சிறுவர்களதுடன் 6 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு; ஏழு எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு

செம்மணி மனித புதைகுழியில் நேற்று புதிதாக ஆறு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் மூன்று சிறுவர்கள், ஒரு குழந்தையின் என்பு கூட்டு தொகுதிகள் அடங்கலாக ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் அகழ்வில் இரு சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றும் ஒரு குழந்தையினதும் மூன்று சிறுவர்களதும் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 34 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் குறித்த விடயம் கண்டறியப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 420 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 416 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை பாசி மணி ஒன்று ஆவது பிற சான்றுப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.
![]()