பலதும் பத்தும்

வாட்டிய வறுமையை போக்க பெற்ற குழந்தையை விற்ற தம்பதி!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் , வறுமையின் கொடுமை காரணமாக, பிறந்து மூன்று நாட்களே ஆன தமது ஆண் குழந்தையை 2.25 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் பரித்கோட் பகுதியைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி தம்பதியினரே இந்த சம்பவத்தை செய்துள்ளனர். ஹரியானாவின் பகதூர்கர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததை அடுத்து, குழந்தை விற்ற சம்பவம் அம்பலமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது டெல்லியில் உள்ள பிள்ளைப் பேறற்ற தம்பதியினருக்கு , குழந்தையை 9.25 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. குழந்தையை மீட்ட காவல்துறையினர், ஜஜ்ஜாரில் உள்ள சமூக சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, குழந்தையின் உண்மையான பெற்றோரிடம் விசாரணை செய்த நிலையில், தாம் கடும் வறுமையில் வாடுவதால், தமது மகன் சிறந்த முறையில் வளர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் குழந்தையை விற்றதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேரை கைது செய்துள்ள பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ம் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *